Tuesday, April 09, 2019

ரஜினிக்கு ஒரு கடிதம்: நதிநீர் இணைப்பு

பாஜக ஆட்சிக்கு வந்தால் உடனே நதிகளை இணைக்க வேண்டும் - ரஜினி காந்த்.

அளவிற்கு மீறிய புகழ், பணம், அதிகாரம் இது எல்லாமே ஒரு நிலையில் காலம் ஒருவருக்கு வைத்த செக்மேட் அல்லது சாபம் எனக் கொள்ளலாம்.

இவைகள் அனைத்தும் கிடைத்தும் ஒருவருக்கு தன்னுடைய லிமிட், டிலிமிட் அறிந்து கொள்ளத் தேவையான தனக்கென நேரம் செலவழிப்பு, நல்ல புத்தகங்கள் வாசிக்கத் தேவையான மன நிலை, தன்னுடைய நிலைக்கென தன்னிடம் பழகும் மனிதர்களைத் தாண்டிய நட்பு பேணும் மனநிலை அமைவது என்பது சிம்ம சொப்பனமே!

உண்மையான "டவுன் டு எர்த் பர்சன்" என்பது அதுவாகத்தான் இருக்க முடியும். எளிமை, பணிவு, பக்குவம் என்பதும் அந்த உலகத்தின் கூரையில் தான் இருக்கிறோம் என்றாலும், இடம், பொருள் தன்னுடைய அறிவிற்கு இதைச் சொல்வது பொருத்தமானதா என்று அறிந்து பேசுவதில் இருக்கிறது.

இந்த நதிநீர் இணைப்பை பற்றி இந்த சூப்பர் ஸ்டார் தொடர்ந்து தன்னுடைய மட்டித் தனமான வாதத்தை வைக்கிறாரே, இவர் இந்த பூமியுனுடைய இரண்டு பில்லியன் ஆண்டுகளின் படிமலர்ச்சிப் பற்றி ஏதாவது வாசித்திருப்பாரா?

கடந்த 600 மில்லியன் ஆண்டுகளுக்குள் எது போன்ற கரடு முரடான வளர்ச்சிகளை இந்த பூமி முகம் கொடுத்து வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் செலுத்தி இருப்பாரா? ஏன் அவ்வளவு தூரம் போகிறோம் பெர்மியன், ட்ரையாசிக், ஜுராசிக், க்ரேட்டேசியஸ் என்ற பூகோள கால க்ரமத்தில் என்னவெல்லாம் இந்த பூமி மேலோடு மாற்றங்களை சந்தித்திருக்கிறது என்று அவருக்கு யாராது சொல்லி இருப்பார்களா?

300 மில்லியன் ஆண்டுகள் வரைக்குமே கண்டங்களே இல்லாமல் ஒன்றாக பாஞ்சியா (Pangea) என்ற முழுப் தரைப்பகுதியாகத்தான் இந்த பூமி இருந்திருக்கிறது. ஒரே கடல்தான்.

டைனோசார்கள் கோலுச்சிக் கொண்டிருந்த காலத்தில்தான் நிலப்பரப்பு பிய்த்துக் கொண்டு தனித்தனியாக கண்டங்களாக நகர்ந்திருக்கிறது. அப்பொழுது ஏற்கெனவே ஓடிக் கொண்டிருந்த நதிகள், ஆறுகளுக்கெல்லாம் என்ன வாகி இருக்கும்?

இருந்த பெரிய ஆறுகள் காணாமல் போயிருக்கும் அத்துடன் அதனையொட்டி வாழ்ந்த உயிரினங்கள் மெல்ல மெல்ல அழிந்துப் பட்டிருக்கும். பூமியின் மோலோடு மாற்றி அமைக்கப்பட்டதால் புதிய ஆறுகள் அதனதன் வழியை கண்டுபிடித்து உருவாகி இருக்கும். அதனையொட்டிய நிலப்பரப்பில் அதனையொட்டிய சுற்றுச்சுழலுக்கு தகுந்த தகவமைவுகளுடன் உயிரினங்கள் உருவாகி படிமலர்ச்சி அடைந்து கொண்டிருக்கும்.

இவை எதுவுமே ஒரே இரவில் அடைந்த மாற்றங்கள் கிடையாது.
கோடிக்கனக்கான ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இந்த பின்னணியில் வைத்து நம்மை பார்த்தால், நாம் யார் இந்த பூகோளத்தின் வரைபடத்தை திருத்தி எழுதிக் கொள்ள? அப்படி நதிகளின் வழியை திருத்தி அமைக்கும் பொழுது எது போன்ற நீண்ட கால மாற்றங்களை இந்த சுற்றுப் புறச் சூழல் முகம் கொள்ளும் என்று சிந்தித்தது உண்டா, மிஸ்டர். சூப்பர் ஸ்டார்?

அன்று தழைத்து, கொழித்து வாழ்ந்து வந்த டைனோசார்கள் இன்று எங்கே? எதனால் அவைகள் அழிந்து பட்டிருக்கக் கூடும்? நீரும், உணவும் தானே அடிப்படை ஆதாரம் அனைத்து உயிரினத்திற்கும் ஆறுகள் தன்னியல்பில் தனது பாதை கண்டு கடலில் கலப்பது தானே காலச் சக்கரம் அதற்கு வழங்கிய இயல்பு. இதில் உங்க ஒரு கோடி ரூபாய் கொண்டு வேண்டுமானால் இருக்கும் குளம், குட்டை, ஆறுகளை தூர் வார கொடை அளியுங்கள்.

போகாத ஊருக்கு வழி காட்டாதிங்க. செலவு மிச்சம்னு.

யாரோ சொல்கிறார்கள் என்பதால் லாஜிக் இல்லாத தன்னுடைய அறிவிற்கு எட்டாத விசயத்தை எல்லாம் உளரி வைக்கக் கூடாது. தானே தேடிப் படித்து, சிந்தித்து பெரும் பெரும் பிரச்சினைகள் பொருத்து வாயை விட வேண்டும்.

உங்களுக்கு ஒரு புத்தகம் சிபாரிசு செய்கிறேன். ஆராய்ச்சிக்கான புத்தகமே ஆனாலும் ஒரு சினிமாவிற்கு உண்டான பிரமாண்டம் இருக்கிறது. உங்களது வாழ் நாளுக்குள் வாசியுங்கள். பிறகு நதிநீர் இணைப்பு பற்றி பேச கொஞ்சம் யோசிப்பீர்கள்.

The Rise and Fall of the Dinosaurs: A New History of a Lost World by Stephen L. Brusatte

Friday, March 15, 2019

வெறுப்பின் எச்சமே அழிவு: Hatred Is Self-destruction


நியூசிலண்ட்ல இரு வேறு துப்பாக்கிசூடுகள். ஆனா, இரண்டிற்கும் அடிப்படை காரணம் ஒன்றே. அது வெறுப்பு! மனித மனம் எப்போதும் எதிர்மறை எண்ணங்களின் மீது அதீதமான பிடிப்பு உள்ளதைப் போல நடிக்கும். இருப்பினும் ஓர் ஓரத்தில் நம்முடைய எதிர் முனையில் இருக்கும் நேர்மறை நாட்டாமையின் மீது கண் வைத்தவாரே, முதலில் அது ஒரு சிறு உவப்பு இல்லாத விசயத்தை செய்து பார்க்கும்.
நாம் உடனே விழித்துக் கொண்டு அதட்டி அது இருக்க வேண்டிய இடத்தில் சுருட்டி அமர வைத்து விட்டால் விளைச்சல் நிலத்தில் ஊடுருவும் களைகள் பெருகி பயிரின் விளைவு குறைவாகிவிடுவதைப் போல குறைந்து விடும்.
தவிர்த்து, எதிர்மறை எண்ணங்களை தொடர்ந்து கேட்டும், பார்த்தும் தவறான வாசிப்புகளும் செய்து வந்தால் அது காட்டுத்தீ போல மட்டுக்குள் கொண்டு வர முடியாத வாக்கில் வளர்ந்து காடு, மேடு, பள்ளம், குழந்தை, முதியோர், நான், நீங்கன்னு பார்க்காம எல்லாரையும் அழித்து விடும்.
இந்த ஐந்து வருட ஆட்சியில் இந்தியா முழுமைக்கும் வெறுப்பு விதைக்கப்பட்டு மெதுவா அது அனைவர் புத்தியிலும் ஊடுருவச் செய்யப்பட்டிருக்கிறது. அது கொளுந்து விட்டு எரிந்து வாழும் வீட்டையே எரித்து சாம்பாலாக்கிக் கொள்வதற்கு முன்னால் விழித்துக் கொண்டால் அனைவருக்கும் நலம்.
இந்த வெறுப்பு, தூய்மை வாதம் பேச வைக்கிறது. குறுகிய சாளரங்களை திறந்து விடுகிறது. அவன் வடுகன், முஸ்லீம், க்ரிஸ்டியன், தாழ்த்தப்பட்ட சாதி என்று இல்லாத ஒன்றை வைத்து அடையாளப் படுத்தி குறுக்கிக்கொள்ளச் செய்கிறது. இன்று ஒரு குழுவை, ஓர் அடையாளப்படுத்தி அவனை அதற்குள் குறுக்கும் அதே மனது நாளை வேறொரு குழுவை இன்னொரு பாட்டிலிலுக்குள் அடைத்துப் பார்க்காது என்று என்ன நிச்சயம்.
நான் தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொண்டே இரவோடு இரவாக தங்களை தற்காப்பு செய்து கொள்வதற்குக் கூட ஆற்றல் இல்லாத ஒரு தாயையும், இரண்டு குழந்தைகளையும் இரத்தச் சகதியில் வெட்டிப் போட்டு விட்டு தலை மறைவாகி விடுபவர்களும் அதே தமிழர்கள் தான். காரணம் உயர் சாதியாம், அவர்கள் தாழ்ந்த சாதியாம். இந்த லட்சணக் கட்டையில் அரசாட்சியை அவர்கள் கையில் கொடுத்து விட்டால் அனைவரும் ஒரே இரவில் ஒரு தாய் பிள்ளைகளாக ஆகி விடுவார்களாம். இதெல்லாம் என்ன மாதிரியான கதை?
பெரியாரும் வந்தேறி, கலைஞரும் வந்தேறி, சு. வெங்கடேசனும் வந்தேறி என்றால் நீ மட்டும் அப்போ யாரு? நீ உன்னுடய நிலப்பரப்பையும் அடையாளத்தையும் குறுக்கக் குறுக்க உன்னுடய இருப்பையே கேள்வி குறியாக்கி விடும் இயற்கையே அது தெரியுமா உனக்கு. வனத்தில் பரந்து விரிந்த காடுகளில் மட்டுமே ஆரோக்கியமான வழியில் பல்லுயிர் பேணல் நடந்தேறுகிறது.
இலங்கையில் நடந்த இனப்போரை காரணம் காட்டுகிறார்கள். அதற்கு பின்னான வரலாற்று சூழ்ச்சி அறிவாயா? அதே பிரித்தாளும் சூழ்ச்சியால்தான் நீ சாதிப் பெருமை பேசி வடுகன், வந்தேறி என்று உன்னுடைய இனத்தின் அடையாளத்தையே குறுக்கி அதே பாதையில் செல்லத் துணிகிறாயா? நீ யாருக்கு இரையாகிக் கொண்டிருக்கிறாய் என்று சற்று நிதானித்துப் பார் உண்மை விளங்கும்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் அதுதான் நம்முடைய மந்தை கூட்டத்திற்கு நடந்தேறுவது. கூட்டத்தை சிதறடித்தால் வேட்டையாடும் ஊண் உண்ணிக்கு வேட்டையாடல் எளிது. எளிய மூளை உடனடி பயன்பாட்டினை எண்ணித் திளைக்கிறது. திறனுடைய மூளை நீண்ட கால அறுவடையின் மீது கண் வைக்கிறது. நீ யாராக இருக்க வேண்டும்?
ஒரு ஜனநாயகத்திற்கு சீமான், வேல்முருகன் போன்றவர்கள் பேசும் அரசியலும் தேவைதான். அது சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ள பயன்படுத்தும் ஊறுகாய் அளவோட நிப்பாட்டிக் கொள்வது நல்லது. மிஞ்சினால் நஞ்சாகி, ஓர் இலங்கைப் போரைப் போன்று வீட்டிற்கே வரவழைத்து கொள்ளும் அனைத்து சாத்தியங்களையும் கொண்டது என்பதை உணருங்கள்.
பெரிய எண்ணங்களை, வெறுப்பை விதைவிக்காத, நிதானமாக நின்று முடிவெடுக்கும் மனித மாண்பு போற்றுபவர்களை தேர்ந்தெடுங்கள். எல்லாவற்றிற்கும் தெருவில் நின்று போராட்டம் நடத்தும் நிலையிலிருந்து மாறி, பதட்டமான சூழலிலிருந்து வெளிவந்து அனைவரும் மென்மேலும் ஒரு மகிழ்வான சமூதாயத்தை பெற்று வாழ்க்கை அமைதியாக நகர அது வழி நடத்தும்.

Saturday, March 02, 2019

நரி மனிதர்கள் ஒரு சிறுகதையின் ஊடாக நிகழ்கால அரசியல்!

சில கதைகள் படிக்கும் போதே தெரியும் இவை நம்மை நிலை குலைய வைத்து உலுக்கப் போகிறது என்று. அந்த வகையில் சற்றுமுன் ஒரு சிறு கதை ஒன்று வாசித்தேன். சாகித்திய அகாதெமி பிரசுரத்தில் வெளியான “ஆச்சரியம் என்னும் கிரகம்” என்ற தமிழ் தொகுப்பிலிருந்து ‘கோன் இச்சி வீடுமலை’ எனும் சிறுகதை.
தொடக்கத்தில் சிறுவர் கதை போன்று ஆரம்பித்து நமது இருமையின் ஓலத்தை உள்ளே செல்லச் செல்ல அதிகரிக்கச் செய்தது அச்சிறுகதை. கதை, கோன் இச்சி என்ற நரியைச் சுற்றி சுழல்கிறது. அந்த நரி தனது குடும்பத்துடன் மகிழ்வோட வாழ்ந்ததுதான். ஆனால், இடையில் தனது தினசரி நரி வாழ்வு மனச்சோர்வு ஊட்டி நகர வாழ்வு வாழ ஆசைப்படுகிறது. தனது காட்டின் அருகே அமைந்து போன காஃல்ப் தளத்திற்கு விளையாட வரும் பெரிய மனிதர்களைப் பார்த்து தானும் மனிதனாக வேண்டுமென்று உந்தப்படுவதே அதற்குக் காரணம்.
அங்கு வாழும் நரிகளுக்கு ஒரு சிறப்பு வரம் இருக்கிறது. ஓக் இலை ஒன்றை உச்சஞ்தலையில் வைத்தவாறு ஒரு மந்திரத்தை உச்சரித்தால் அது எதுவாக ஆக வேண்டுமென்று ஆசைப்படுகிறதோ அப்படியே ஆகிக்கொள்ள முடியும். ஆனால், மாறியது மாறியதுதான் மீண்டும் பழைய படியாக நரியாக திரும்ப வரவே முடியாது.
அம்மாவிடம் தனது விருப்பத்தை கோன் இச்சி தெரிவிக்கிறது. அம்மா அதனைக் கேட்ட உடனேயே மிகுந்த வருத்தம் கொண்டு,முன்னால் நம்மில் சில பேர் இப்படி மாறிச் சென்றிருக்கிறார்கள், ஆனால் அவர்களால் திரும்ப வரவே முடியவில்லை. மேலும் நீ நினைப்பது போல மனித பிழைப்பு ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேக்காமல் மனிதனாகிவிட்டது.
தான் ஆசைபட்டவாரே கோட், சூட், டை அணிந்து, நகர வீதியில் இறங்கி நடந்து அங்கே முதலில் பார்த்த ஒரு வேலைக்கான விளம்பரத்தைப் பார்த்து உள்ளே செல்கிறான் கோன் இச்சி. விண்ணப்ப மனு என்றால் என்ன என்று கூடத் தெரியாமல், அப்பாவியாக நிறுவனரிடமே திரும்பக் கேக்கிறான். அவர் வித்தியாசமான ஆளாக இருக்கிறானே என்று மேலும் விசாரித்து தான் ஒரு வனமகனென்றும், முகவரியே கூட வனத்தையொட்டி புனைந்து கொடுத்த பெயர்களை கொடுப்பதையும் கண்டு ஆர்வ மூட்ட தனது கம்பெனியும் “மயிர்த்தோல் ஆடை” நிறுவனம் தானே என்றும் இவன் மலைப்பிரதேச ஆளாக இருப்பதால் பொருத்தமாக இருக்கும் என்று வேலை கொடுக்கிறார்.
ஆனால், கோன் இச்சிக்கு நிறுவனத்தின் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்றளவிலேயே ஞானம் இருந்ததே ஒழிய உண்மையாக அது எது போன்ற வேலை என்று புரிந்து கொள்ள முடியவில்லை.
பெரிய வீடு, கை நிறையச் சம்பளம், ஆசைப்பட்ட படி ஒரு கம்பெனிக்கு அதிகாரி என்று பெருமிதம் கொள்கிறான். தானும் நிச்சயமாக ஒரு நாள் காஃல்ப் நமது பழைய வீட்டிற்கு அருகில் இருக்கும் புல் தளத்தில் விளையாடுவோம் என்ற கனவோடு உறங்கிப் போகிறான்.
மறுநாளிலிருந்து தனது உழைப்பை தீவிரப்படுத்தி அனைத்தையும் மிக வேகமாக கற்று, முதலாளியே இவனை ஒரு முன் உதாரணமாக காட்டி மற்றவர்களை வேலை வாங்கும் அளவிற்கு நல்ல பெயர் எடுத்து மென்மேலும் பதவி உயர்வு, சம்பளமென்று உயர்ந்தபடியே அவனது வாழ்க்கை நகர்கிறது. மாத மாதம் தனது நரியாக இருக்கும் அம்மாவிற்கு முயல், பன்றி இறைச்சி என்று நிறைய வாங்கிக் கொண்டுச் சென்று சந்தித்து விட்டு வருவான்.
அப்படியான ஒரு சந்திப்பில் அம்மா, கோன் இச்சியை தனது கடந்த கால வாழ்வு நரி என்பதை மறந்து விடுமாறு கூறுகிறாள்; அப்பொழுதுதான் மேலும் நீ மகிழ்வாக இருக்க முடியுமென்றும் எடுத்துச் சொல்கிறாள். ஆனால், கோன் இச்சிக்கு அப்பொழுது ஏன் சொல்கிறாள் அம்மா என்று விளங்கவில்லை.
வேலை இடத்தில் முன் பனி பருவகாலத்தில் நன்றாக விலை போகக் கூடிய தோல் ஆடைகளின் கையிருப்பு குறைவாக இருப்பதும், நிறுவனத்திற்கு அதன் மூலம் கிடைக்கும் உபரி வருமானம் குறையக் கூடுமென்றும் எண்ணுகிறான். அது வரையிலும் தொழிற்சாலை பக்கம் எட்டிப்பார்க்காதவன் உள்ளே நுழைகிறான். அங்கே கரடி, முயல், மான், அணில், நரி என்று அனைத்து வித விலங்குகளும் கொல்லப்பட்டு, தோல் குழு குழுவாக தொங்கவிடப்பட்டிருப்பதை முதன் முதலாக கண்ணுருகிறான்.
தலை ஒரு நிமிடம் சுற்றி நிற்கிறது. கதறி அழுகிறான் அவைகள் நம்மையே உற்றுப் பார்ப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது. குற்ற உணர்வு பீரிட தள்ளாடிபடியே வெளியே வந்து வீடு சேர்கிறான். இரவெல்லாம் உறக்கம் கொள்ள முடியாத படிக்கு அவனுக்கு நினைவு அதனைச் சுற்றியே வட்டமிடுகிறது.
மறுநாள் முதலாளி இவனை அழைத்து விடுகிறார். பாராட்டு பத்திரம் வாசித்து விட்டு, வரும் பருவ காலத்தில் நிறுவனத்திடம் தோலின் கையிருப்பு குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். அதற்கு அவரே ஒரு தீர்வையும் கொடுக்கிறார். கோன் இச்சியை மலைக்குச் சென்று வேட்டையாடி நிறைய தோல்களை சேகரித்து வருமாறு பணிக்கிறார். கோன் இச்சி ஒரு நிமிடம் ஆடிப்போகிறான். முதலாளி தொடர்ந்து அப்படியாக செய்தால் பணி உயர்வும், மேலும் சம்பளத்தை உயர்த்திக் கொடுப்பதாகவும் கூறுவதை கேட்டதும் அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியில் திளைத்து ஒத்துக் கொள்கிறான்.
தனது வேட்டைக் குழுவுடன் இவனும் கையில் ஒரு துப்பாக்கியுடன் மலைக்குச் செல்கிறான். காடு அதிர அதிர வேட்டை நாய்களை அனுப்பி மிருகங்களை இவர்கள் பக்கம் அனுப்பி சுட்டு தோல்களை சேகரிக்கிறார்கள். இச்சி கோனும் தன் பங்கிற்கு மிக அழகான பளபளப்பான ஒரு நரியை தூரத்தில் மற்றுமொரு விலங்கை துரத்திச் செல்வதைக் கண்டு, அந்த நரியை சுட்டு எடுத்து வருகிறான்.
வேட்டையின் போக்கை காண வந்த முதலாளி கோன் இச்சி வேட்டையாடிய நரியின் அழகை மிகவும் பாராட்டி இது போன்றதொரு அழகான, பளபளப்பான தோலை நான் கண்டதே இல்லை என்று புகழ்கிறார். அப்பொழுதே அவன் அந்த நரியை பக்கமாக கொண்டு வந்து மிக அருகில் வைத்து முகத்தை பார்க்கிறான்.
முகம் வெளிரி, கால்கள் கிடுகிடுக்கிறது கையில் பிடித்திருந்த துப்பாக்கியும், நரியும் நழுவி பூமியில் விழுகிறது. கதறி அம்மா என்றழைத்தாவாறு, காட்டிற்குள் ஓட்டம் பிடிக்கிறான். எதிர்படும் மரங்களின் மீது மோதியவாறும், வேர்களில் இரடி கீழே விழுந்து எழுந்தும் ஓடுகிறான்.
அவன் வேட்டையாடியது வேறு யாருமல்ல. அவனது அம்மாவைத்தான். அதற்கு பிறகு நடப்பது நம் அனைவருக்கும் தெரியும். மனிதர்களை வெறுக்கிறான். யாரையும் பார்க்க பிடிக்காமல் தனது அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டது அதற்குப் பிறகு என்ன ஆனதென்றே தெரியவில்லை என்பதாக கதை முடிகிறது.
நீதி: இது கதையா? இது பாடம். வாசிக்கும் போது எனக்கு சமநோக்கில் இப்பொழுது உள்ள அதிமுக மந்திரி சபைதான் தொடர்ந்து மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது. வரலாறும் தெரியாமல், தங்களின் கையில் இருக்கும் அதிகாரத்திற்கு பின்னால் இருக்கும் உழைப்பு, வியர்வை அதன் மகிமையும் உணராமல் ஏதோ தனக்கு இன்று இதமாக இருக்கிறது என்று கடும் உழைப்பின் பெயரில் ஈட்டிய உரிமைகளை எல்லாம் தாரை வார்த்து கொடுப்பதை பார்த்தால் அந்த கோன் இச்சிதானோ இவர்கள் என்று நினைக்க தோன்றவில்லை.
அதிலும் குறிப்பாக மாஃபா பாண்டியராஜனும், செங்கோட்டையனும் செய்து வருவது இச்சி கோன் செய்யத் துணிந்த அதே ”அம்மா நரியை” வேட்டையாடலை ஒத்த குழந்தைகளின் கல்வி உரிமையை பறிப்பது என்றால் மிகையாகுமா?
ஜப்பானிய மூலம்: ஷிஞ்ஜி தாஜிமா
தமிழில் : வெங்கட் சாமிநாதன்.

Tuesday, February 26, 2019

போர் ஒரு வியாபாரம்! War Business

அமெரிக்காவிற்கு போர் என்பது ஒரு வர்த்தகம். அவர்களுக்கு அது பொருளாதாரத்தை வளர்தெடுக்கும் ஓர் அங்கம். அப்படி பார்க்கும் அவர்களுக்கே சில நேரத்தில் தங்களுடைய பொருளாதாரத்தின் அடிமடியிலேயே கை வைத்துக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடுவதுண்டு. உதாரணம் அண்மைய கால ஆஃப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா போர்கள்.

அங்கிருந்தெல்லாம் பெரிய அளவில் எதிர்பார்த்த அளவிற்கு போட்ட பணம் திரும்ப வரவில்லை. நாட்டின் படை வீரர்களின் இழப்பும் அதிகம். அமெரிக்க பொது மக்களுக்கு பொருளாதார இடர் பாடுகளைத் தாண்டி உயிருக்கு அச்சுறுத்தல் பயம் கூட இல்லை. ஏன்னா, பூகோள ரீதியா ரொம்ப பாதுகாப்பான தொலைவில இருக்குற ஒரு நாடு.

இந்த நிலையில் நம்முடைய நிலப்பரப்பிற்கு வருவோம். இத்தனை பெரிய நெருக்கடியான மக்கள் தொகையை ஒரு குறுகிய இடத்திற்குள் வைத்துக் கொண்டு, சும்மா போர் போர் என்று இரண்டு பக்கமும் மார்தட்டினால் இழப்பு என்னவோ அனைத்து விதத்திலும் இரண்டு பக்கத்திற்கும்தான்; இரண்டு விதத்திலும், பெரும் பொருளாதார மற்றும் உயிர் சேதத்தை சந்திப்போம்.

உண்மையான போர் என்று வரும் போது இரண்டு நாட்டு நிலப்பரப்பிற்குள் வான்வழி தாக்குதல் நிகழ்த்தினால், எந்த எடை கொண்ட குண்டுகள் போட்டுக் கொண்டாலும் எதுவும் பயனற்று போகப் போவதில்லை. எங்கு விழுந்தாலும் பாரிய சேதத்தை உண்டு பண்ணும். அதனை யார் அனுபவிப்பது?

போருக்கு பின்னால் நம்முடைய திறமையைப் பார்த்து, நம்மை விட குட்டி நாடுகள் உங்களுடைய போர் தளவாடங்களில் நாலு அதில், பத்து இதிலன்னு ஆர்டர் கொடுத்து பிசினெஸ் செய்து கொள்ள உதவப் போகிறதா?

இப்படி நடக்கவே வாய்ப்பற்ற, தேவையற்ற ஒன்றை வைச்சு அரசியல் லாபத்திற்காக ஹாலிவுட் படக் கதை ரேஞ்சிற்கு செஞ்சா நம்முடைய நம்பிக்கையை, மானத்தை நாமே பன்னாட்டு மேடையில இழந்துடுவோம்.

ஆல்ரெடி, இந்தியாவில படிச்சு வாங்கின பட்டங்களை ஒரு பயலும் வெளியில மதிக்கிறதே இல்லை. அதிலே இந்த மாதிரியெல்லாம் சுய சொரிதல் செஞ்சா ...ஹ்ம்ஹும்.

ஆனா ஒன்னு மட்டும் தெரியுது...

நம்மை ஆள்பவர்களுக்கு பன்னாட்டு மேடையில் இந்தியாவை ஓர் உயர்வான இடத்தில் வைத்துப் பார்க்கும் எந்தவிதமான உண்மையான அக்கறையும் கிடையாது. இருந்திருந்தால் இந்தியா என்றோ அனைத்து துறைகளிலும் தன்னிறைவை எட்டியிருக்க முடியும்.

அவர்கள் யாருக்கும் இந்திய கான்ஸ்டிடியூஷன் மீது எந்த விதமான நம்பிக்கையுமில்லை, மரியாதையுமில்லை. 🙄

பார்த்து பொழச்சிக்கிடக்கிற வழியப் பார்ப்போம்!

Monday, February 25, 2019

முதல் கோணல் முற்றும் கோணல்: Sinking Ship PMK

நானும் அந்த ”பாமக சின்னய்யா” சம்பவத்தை பார்த்தேன் 🤓. என்ன சொல்லுறதுன்னே
தெரியல! இப்படி ஒரு (சாதிக்) கட்சியை கருத்தரிச்சு, அதை அடை காத்து தன் சமூக மக்களுக்காகவாவது சிறுக ஆசைப்பட்டு பெரும் வாழ்வு வாழ்ந்திருக்கலாம். நீங்க என்னதான் அழி ரப்பர் வைச்சு அழிச்சு நாங்க சாதிக் கட்சி இல்லன்னு இனிமே நிரூபிக்க நின்னாலும் எடுபடாது. தமிழக தமிழர்களையே காப்பாத்தறேன் அளவிற்கெல்லாம் யோசிச்சு நீங்க இப்படி இறங்கி இருக்க வேண்டாம்.
யாரையோ நம்பி இப்படி இத்தனை ஆபத்தான ஒரு சூறாவளியில சிக்கிச் சின்னாபின்னமாகிட்டீங்களே.
உங்க உழைப்பெல்லாம் இப்படி அவசரப்பட்டு இந்த கால கட்டத்தில அதுவும் தமிழகம் கொந்தளிச்சு போயி கிடக்கிற நேரத்தில போயி, அவிங்களோட சேர்ந்து உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணான்னு சோலியை முடிச்சிக்கிட்டீங்க.
சரி போறதுதான் போறேன் கொஞ்சம் டேமேஜ் செஞ்சிப்புட்டு போவோம்னு...
திராவிட நாடு கோரிக்கையை நிறைவேற்றினாங்களா, அதுக்காக எத்தனை பேரு சுடுகாடு போனாங்கன்னு- சம்பந்தா சம்பந்தமில்லாம எந்த கால கட்டத்தில இருந்த விசயத்தை எந்த கால கட்டத்தோட இணைச்சு டேக் டைவர்ஷன் போட்டு கோர்த்து விடப் பார்த்தீங்க 🙄.
அண்ணா எந்த காரணங்களுக்காக அதை சுருட்டி ஓர் ஓரத்தில வைச்சார்னு ஏன் எங்கயும் படிக்கலயா? ஏன் ஒரு புரட்டு வரலாற்றை தாங்களே வாசித்து அறிந்து கொள்ள விருப்பமில்லாத ஒரு கூட்டத்திற்கு ஊட்ட நிக்கிறீங்க.
நாம வாழற காலம் என்ன பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் உயிரைப் பணயம் வைத்து போராடி இயக்கம் வளர்த்த காலமா? என்ன பெரிசா தியாங்களை செஞ்சு இன்றைக்கு இப்படி நாமல்லாம் வெள்ளையும் சொள்ளையுமா ஃபைவ் ஸ்டார் விடுதியில பத்திரிக்கை சந்திப்பு நடத்துர அளவிற்கு வளர்ந்திருக்கோம்.
எத்தனை ஆண்டுகள் நமக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் சிறைச்சாலைகளில் தங்களுடைய பொன்னான காலத்தை கழித்திருப்பார்கள். எத்தனை ஹார்ட்கோர் போராட்டங்களை முன்னின்று வழி நடத்தி இருப்பார்கள். நமக்கு ஒரு மூன்று தேர்தலுக்காக உழைத்த உழைப்பு பலன் கொடுக்க வில்லை என்றவுடன் இத்தனை ஆயாசத்துடன் சாணக்கியன் ஆகுகிறேன் என்று சகுனி வேலை செய்ய தயார் ஆகிவிட்டீர்களே நீங்கள். சரியா?
திராவிட நாடேதான் வேண்டுமென்றால் மற்றுமொரு ஈழத்தை இங்கே அவர் கொண்டு வந்திருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? மாநில சுய ஆட்சிக்கான அழுத்தத்தை கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ள எடுத்த வியூகத்தை, நடக்கவே முடியாத விசயத்திற்காக எத்தனை பேர் சுடுகாடு போனார்கள் என்று கேக்குறீர்கள். எது மாதிரியான தர்க்கமிது?
அன்று அண்ணா சாதுர்யமாக காய் நகர்த்த வில்லை என்றால் இன்றைக்கு உங்களுக்கு இந்த மேடையே கிடையாது என்பதை உணருங்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கக் கூடாது. நாமதான் முழுந்துறோம்னா கூடவே இரண்டு பேரை சேர்த்து கூட்டிட்டு போவோம்னு நினைக்கக் கூடாது. Come up with some other valid argument, the one you uttered is utter nonsense!

Thursday, February 21, 2019

5, 8th STD பொதுத்தேர்வு குலக்கல்விக்கான நுழைவுவாசல்!

நியூஸ் 18ல குணசேகரன் 5 மற்றும் 8 வகுப்பிற்கு பொதுத் தேர்வு தேவையான்னு தலைப்பு வைச்சு அழகான கேள்விகளோட நகர்த்தும் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஒரு பதினைந்து நிமிடம் தான் அதுவும் அந்த உலகமகா மேதாவி பத்ரி வாய திறக்கிற வரைக்கும்தான் முடிஞ்சது.
தெரியாமத்தான் கேக்குறேன் அதெப்படிடா ஊருக்கே ஒத்து வராத ஒரு விசயம் உங்களுக்கு மட்டும் சரின்னு படுது? எங்கிருந்து உங்க மாதிரி ஆளுங்களுக்கு மட்டும் இத்தனை அறிவு பொத்துகிட்டு மண்டைக்குள்ளற இறங்குது.
ஒரு பத்து வயது பிள்ளைக்கு ஐந்தாவதுல இருக்குடி உன்னோட வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏத்தன்னு மிரட்டி மிரட்டியே பள்ளிக்கு அனுப்பினா அந்தப் பிள்ளை விளங்குமா? நீயெல்லாம் அமெரிக்காவில வந்து என்னாத்தை நொட்டிட்டு போயி அங்க சமூக காராச்சேவை ஆற்றப் போயிருக்க? பிள்ளைகளின் குழந்தமையை முளையிலேயே கிள்ளி போட்டுட்டு அப்படி என்ன மாதிரி வாழ்க்கையை வாழ கத்துக் கொடுக்கிறீங்க?
ஃபெயில் செஞ்சு மீண்டும் அதே வகுப்பிற்கு அனுப்பினா ஒவ்வொரு நாளும் எவ்வளவு அசிங்கமாக ஃபீல் செய்யும் அந்த பிஞ்சு மனசு. படுக்கையை விட்டு எழ ஆர்வம் வருமா? ஏன் பத்தாவது, பணிரெண்டாவது பிள்ளைங்க மதிப்பெண் அழுத்தத்தில தங்களை தற்கொலைக்கு தள்ளிக்கிறது போதாதா? அதையும் இன்னும் குறைத்து 10 வயசிலயே யோசிக்க சொல்லுறீங்களா?
இப்படி மிரட்டி பள்ளிக்கு அனுப்பினா அந்த மனசு எப்படியான பயங்களோட தன்னை வளர்த்தெடுத்து அடுத்த நிலைக்கு எடுத்துட்டுப் போகும்? பத்ரி கேக்குறார், ஏன் அப்போ பத்தாவது, பணிரெண்டாவது பிள்ளைங்களுக்கு பொதுத் தேர்வு வைக்கணும், ஏன் கல்லூரியிலயே வைக்கணும் அதுங்களும் பிள்ளைங்க தானே, அதுங்க என்ன பாவம் பண்ணுச்சின்னு கிண்டல் மசிறு வேற ...மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுற கணக்கா. இதெல்லாம் இன்னும் எத்தனை வக்கிரத்தை உள்ளர போட்டு பூட்டி வைச்சிக்கிட்டு சாந்த சொரூபியா குரலை தனிச்சு, முடியல!
மிடில் ஸ்கூல் வரைக்குமே வகுப்பறையில் குழந்தைகளை கவனிச்சு அவுங்களுக்கு என்ன தேவைன்னு கவனிச்சு, ஆசிரியர்கள் மாணவர்களுக்கிடையே இருக்கக் கூடிய பரஸ்பர நம்பிக்கையை எப்படி வளர்க்கிறது, அதன் மூலம் எட்டக் கூடிய தன்னம்பிக்கையை எப்படி அதீதப்படித்தி தாங்கள் கற்றுக்கொள்ளும் விசயங்களை தன்னெழுச்சியா உள்வாங்கி பிற்காலத்தில் அவனவனும் சொந்தமா சிந்திச்சு அவனவன் துறையில சிறக்கும் படியா facilitate செய்ய முடியுங்கிற வழியப் பாருங்க.
அதை விட்டுட்டு அந்த குழந்தைகளோட சிரிப்பையும் வாழ்க்கையையும் திருட நிக்காம. எனக்கு புரியுது அவிங்களுக்கு கை நிறைய வேலைய கொடுக்கிற மாதிரி குழந்தைகளோட பெற்றோர்களுக்கும் அள்ளி வைச்சிட்டா நீங்க பிற்காலத்தில் செய்யப்போற அயோக்கியத்தனம் ஒன்னுக்கும் ஒருத்தனும் தெருவிற்கு வர மாட்டான்... அதுக்கும் சேர்த்து ஓர் ஆப்பு அடிச்ச மாதிரி இருக்கு 5, 8, 10, 11 அண்ட் 12. சரியா போச்சா மக்களே!
சில மூஞ்சிகளை நினைச்சாவே குமட்டிக் கொண்டு வருகிறது. உங்களோடெல்லாம் இன்றைய என்னுடைய இருப்பை பகிர்ந்துக்க நேர்ந்ததை நினைச்சாவே கேவலமாக இருக்கிறது. இதெல்லாம் ஒரு பிழைப்பா!?

https://www.youtube.com/watch?v=eYBWJxMDHnI&fbclid=IwAR3WgI4e65bbzpSUJt6-V0KHFlynvJeyUFQA5nux-5UYw6jOJIz_x7-xOZ8

Thursday, February 14, 2019

ஆழிப்பேரலையை ஒத்த மனித இனம்: Sapiens 3

சேப்பியன்ஸ் புத்தகத்தின் முதலாம் பகுதியை முடித்த நிலையில் இதனை பகிர்ந்து கொள்ளாமல் நகர்வதற்கு மனம் ஒப்பவில்லை.
எப்பொழுது சேப்பியன்ஸின் மூளையளவு பெருத்து, நிமிர்ந்த நடை கொண்டு, இரண்டு கைகளை வீசி நடந்து திரியும் நிலைக்கு இந்த பரிணாமம் அவர்களை எடுத்துச் சென்றதோ அன்றே அவர்களின் அறிவுப் பசியும், குடற்பசியும் பல்கிப்பெருகி மிக்க அழிவுகளையும், கட்டுக்கடங்கா வளர்ச்சியையும் விதைத்து அவர்களின் வழித்தடம் தோறும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கிறது எனலாம்.
ஆஃப்ரிகாவின் கிழக்கு கடற்கரையோரம் மெதுவாக நடந்து ஆசியாவின் மத்தியப் பகுதியை அடைந்தவர்கள் அப்படியே கொஞ்சம் பேர் இந்திய துணைக்கண்டப் பகுதியிலும், மேற்படி நகர்ந்து தெற்காசியப் பகுதிகளிலும் குடியேறினர்.
இடையில் தங்களுடைய உப மனித இனங்களை சந்திக்கும் கணம் தோறும் அறிவின்பால் சார்ந்தவர்களை புணர்ந்து உள்கிரகித்தோ, அல்லது பகையுணர்ச்சியின்பால் போரிட்டு அழித்தோ சேப்பியன்ஸ் இனம் தங்களை அந்த சூழலியலுக்கு தகுந்தாற் போல் தகவமைத்துக் கொண்டு தழைத்து வாழ்கிறார்கள்.
வேட்டையாடிகளாக இருந்த காலத்தில், நம்முடன் புழக்கத்தில் இல்லாத விலங்கினங்களை சந்திக்கும் கணம் தோறும், அதி புத்திசாலித்தனமான மண்டையறிவுடன் உருவாக்கப்பட்ட நாம் பல்வேறு பட்ட வேட்டை உக்திகளைக் கொண்டு ஏனைய விலங்கினங்களை கொன்று குவிக்கும் ஒரு பேரழிவின் கருவியாக்கி இருந்தது நம்மை இந்த இயற்கை என்பதை நாம் இங்கு மறந்து விடக் கூடாது.
பல கோடி ஆண்டுகளாக பல கண்டங்களில் செழித்து வாழ்ந்து வந்த பல பெரும் பாலூட்டிகள் எங்கெல்லாம் இந்த வேட்டையாடி சேப்பியன்ஸ் காலூன்றினானோ அங்கெல்லாம் ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்குள்ளாகவே அழித்தொழிக்கப்பட்டிருந்தது.
இந்த பின்னணியில் நாம் வேட்டையாடிகளாக இருந்த காலத்தில் இயக்கமே அற்ற நாடோடிகள் என்றளவில் மட்டுமே நம்மை குறுக்கி பார்த்துக் கொள்ள முடியாது. நாம் பேரழிவுகளையும், போராட்டங்களின் ஊடாகவும் இந்த பரந்து விரிந்து கிடந்த கிரகத்தில் நம்முடைய ஆளுமையை மென்மேலும் வளர்தெடுத்துக் கொள்ள இரத்தம் சிந்தி ஆதி சேப்பியன்ஸ் செப்பணிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றளவில் புரிந்து கொள்ள வேண்டும்.
தெற்காசியாவின் தீவுகளிலிருந்து மெல்லப் பரவி என்று அவர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலண்ட் போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கும் பெருமளவிலான விலங்கு உணவுச் சங்கிலிகளையும், அதனைத் தொடர்ந்த சூழலியல் மாற்றங்களையும் உருவாக்கத் தொடங்கினார்களோ அன்றே நமது அடுத்தக்கட்ட நகர்வும் தொடங்கிவிட்டது.
அதற்கு சில பத்தாயிரம் வருடங்களுக்குப் பின்னால் சைபீரியாவின் மேற்கு நிலப்பரப்பில் பனி உறைவினால் தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருந்த இணைப்பு, மேம்பட்ட சூழலியல் தகவமையும், விலங்கு புரதத்தின் பால் ஈர்க்கப்பெற்றிருந்த அந்த பகுதியில் வாழ்ந்த சேப்பியன்ஸ்களை மெல்ல வலசை போகும் பாலூட்டிகளின் பின்னால் நகர வைத்து வட அமெரிக்கா கண்டத்திற்குள் காலூன்ற வைத்தது.
அங்கும் ஒரு மாபெரும் பேரழிவிற்கு இந்த வேட்டையாடி சேப்பியன்ஸ் வழி கோணி, சுற்றுச் சூழலில் ஒரு பெரும் மாற்றத்தினை உருவாக்குகின்றனர்.
இதிலிருந்து என்ன புரிய வருகிறது என்றால் எங்கெல்லாம் சேப்பியன்ஸ் காலடி பட்டதோ அங்கெல்லாம் அதி பயங்கரமான உருவத்தினை கொண்ட பாலூட்டிகளையும், எடையுடைய பறவைகளையும், பல்லூயிர்களையும் பெருமளவில் கொன்று குவித்திருக்கிறான். தங்களுடைய உடை, உணவு, பாதுகாப்பு என பல காரணங்களுக்காக.
அது மிக இயல்பாகவே நடந்திருக்கிறது. கற்கால கருவிகளை கையாண்ட காலத்திலேயே கிட்டத்தட்ட 50 விழுக்காடு அத்தனை பெரிய பேரழிவுகளையும் நிகழ்த்தியிருக்கிறது இந்த இருகால் கொண்ட அப்பாவிகளைப் போல் உள்ள சேப்பியன்ஸ் இனம்மென்று இந்த புத்தகம் பல சான்றுகளுடன் சுட்டிச் செல்கிறது.
பின் வந்த காலங்களில் அந்த பல்லூயிர்களின் நடமாட்டம் குறைந்த காலத்தில், வேளாண் இனம் அடுத்தக் கட்ட அலையாக இந்த நிலப்பரப்பெங்கும் ஆளுமை கொள்கிறது. முதல் ஆழிப்பேரலையையொத்த வேட்டையாடி சேப்பியன்ஸ் பரவலில் பெரும் விலங்கினங்கள் அழித்தொழிக்கப்பட்டன. இரண்டாவது அலையான வேளாண் குடிகள் நிலத்தினை திருத்தியும், அழித்தும் அடுத்த மாற்றத்தினை நிகழ்த்துகிறார்கள்.
மூன்றாவது அலையாக தொழிற்புரச்சி ஓங்கிய காலத்தில் நாம் இருக்கிறோம்... அவர்கள் அளவிற்கு அழிக்க ஒன்றுமில்லை என்றாலும் மிச்சமிருப்பது நம்முடைய இருப்பிற்கான இந்த பிராணவாயு அதுவும் மிச்சமிருக்கும் இந்த வனங்களில் மட்டுமே. அதனையும் கண் மூடித்தனமாக பழைய நினைப்புதான் பேராண்டி கணக்காக கையாண்டால், நாம் இந்த பூமிப்பந்தின் மேலடுக்கில் முகவரியில்லாமல் துடைத்தெரியப்படுவோம்.

Related Posts with Thumbnails