Monday, April 09, 2018

தம்பிகளே இழப்பதற்கு இங்கே ஏராளமிருக்கிறது!

ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னா மெய் ஆகிடுமா? காமராசர் காலத்திற்கு பிறகு வளர்ச்சியே இங்கே இல்லையென்றால் எதனைச் சுரண்ட கட்டி எழுப்பிய அரசு கல்வி நிறுவனங்களை பட்டப் பகலில் ஜோப்படி செய்ய முயற்சிக்க வேண்டும்? ஒரு மாநில அரசே அந்த ஊர் மக்களின் உழைப்பில் உருவாக்கிய மருத்துவக் கல்லூரிகளில் எது போன்ற தேர்வுகளை நடத்தி மாணவர் சேர்க்கை செய்ய வேண்டுமென்ற உரிமையில் தலையை நுழைக்க வேண்டும்?
அரசாட்சி நடத்தவே தகுதியற்ற ஒருவருக்கு சரியான நேரத்தில் கோர்ட் தீர்ப்புகளை வழங்காமல் தள்ளிப் போட்டு, தேர்தலில் வெற்றியை வழங்கி, பிறகு அவரது மரணத்திற்கு பின்னாக, மீன் வலை போட்டு அள்ளியது போல அரசியல் ஞானமற்ற, அறமற்ற, எதிர்கால திட்டங்கள் ஏதுமற்ற பல சில்லுண்டித் திருடர்களை கொத்தாக வைத்துக் கொண்டு திரைமறைவு அரசியல் செய்வதா? அரசியல் அறம், மரபு?
இதனைச் செய்வதற்கு சிறிதும் அஞ்சாதவர்கள் மக்களாட்சியை எந்த குழிக்குள்ளும் தள்ளி புதைக்க மாட்டார்கள் என்பதில் என்ன சந்தேகம் இருந்திட முடியும்? ஒரு மாநிலம் கிடைத்த வளத்தைக் கொண்டு தன்னாலான அளவு வளர்ச்சியைக் காட்டி பிற மாநிலங்களோடு ஒப்பிடும் வாக்கில் சற்றே உயரத்தை காட்டியிருக்கிறது என்றால், அதனை மாடலாகக் கொண்டு தாங்கள் ஆளும் மாநிலங்களில் அவற்றை பின்பற்றி உயர்த்த நினைப்பார்களா அல்லது பிற பின் தங்கிய மாநிலங்களின் வரிசையில் அதனையும் வைத்து அழகு பார்க்க எண்ணுவார்களா?
பொய்களை பரப்பியே ஒரு சிறந்த நிர்வாகத்தை வழங்கிட முடியும் என்று யார் இவர்களுக்கு பாடம் எடுத்தது? வளர்ச்சி என்பது தன்னைச் சுற்றி நிகழ் காலத்தில் நாம் அனுபவிக்கும் வசதிகளைக் கொண்டு கண்டுணரும் ஒரு விடயம். அது கல்வி வசதியாகட்டும், மருத்துவ, சுகாதார வசதியாகட்டும் எல்லாவற்றையுமே சிறிது சிறிதாக கடினமான உழைப்பின் பெயரில் ஈட்டிக் கொள்வது. அதற்கு பல வருடங்கள் பிடிக்கும். பணத்தைக் கொட்டி ஊடகங்களில் போலியான பரப்புரைகளின் மூலம் அடைவது கிடையாது.
ஒரு நாட்டை கட்டியெழுப்பும் பொழுது, அது வரையிலும் சமூக சமநீதியற்ற ஒரு சமூதாயத்தில் அடையப்படாத விடயங்களான அணைகள், பள்ளிகள், மருத்துவம் ஏனைய வசதிகளுக்கென அடித்தளம் போடுவது என்பது ஓர் இயல்பான விடயம். அதுவும் போர்க்கால அடிப்படையில் சில துறைகள் பீரிட்டு வளர்த்தே எடுக்கப்பட வேண்டியதாக இருக்கும்.
உதாரணமாக கோயபல்ஸ் முறையில் தொடர்ந்து பரப்பப்படும் காமராசர் காலத்து பொற்கால துறைகளான அணைகட்டுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு. அதற்குப் பிறகு இத்துறைகள் எந்த மாற்றத்தையும் அடையவே இல்லை போன்ற ஒரு பிம்பத்தை கட்டி எழுப்புகிறார்கள். இது எத்தனை வடிகட்டிய முட்டாள்தனமான வாதம்? ஒரு மாநிலத்திற்கு முக்கிய அணைகட்டுக்களாக எத்தனை அணைக்கட்டுக்கள் தேவைப்படும். கிடைக்கும் நில அமைப்பு, வன வளம் அதனில் பெறப்படும் நீர் வரத்து, அந்த பூமியத்தை சுற்றியுள்ள மக்களின் வாழ்விடமென்று எத்தனையோ காரணிகளைக் கொண்டே ஒரு முக்கியமான அணைக்கட்டிற்கான அடித்தளம் அமைகிறது.
போகிற போக்கில் நினைத்த இடத்திலெல்லாம் அணைக்கட்டுக்கள் அமைத்து விட முடியுமா என்ன? இது எது போன்ற வாதம்? தெரிந்துதான் பேசுகிறோமா அல்லது மக்கள் அனைவரும் முட்டாள்கள், அடிப்படை அறிவே அற்றவர்கள் என்ற முறையில் பொய்யிலே அரசியல் அறமற்று தன் உடல் வளர்க்க பேசும் பேச்சா?
அந்த கால கட்டத்திற்கு பிறகு எந்த அரசும் எதுவுமே செய்யாமல் தான் நாம் உயிர் வாழ்ந்து, கல்வியறிவு பெற்று இன்று இப்படி வீண் வம்படித்து பிளவுகளை உருவாக்கி நம்முடைய வளங்களை வேற்று மாநிலத்து மக்கள் சூழ்ச்சியின் பால் பிடிக்க வழி கோலுகிறோமா?
ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன் அதில் எந்தளவிற்கு உண்மைத் தன்மை இருக்கிறது என்று அறிந்து கொள்ள குறைந்த பட்ச உழைப்பையாவது போட வேண்டாமா?
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இப்பொழுது எந்த அரசியல் அறமுமற்று பொய் பிரச்சாரங்களை பரப்புவதற்கே பெரிய அளவில் தங்களுடைய நேரத்தையும், பணத்தையும் போட்டு அரசியல் வளர்க்கும் சூழலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழலிற்கு நாம் நகர்ந்திருக்கிறோம்.
கிடைத்த ஐந்து வருடங்களில் உங்களுடைய நாற்பது காலத்து கடின உழைப்பின் பெயரில் கட்டியெழுப்பிய, கோரிப் பெற்ற பல உரிமைகள் திரைக்கு பின்பாகவும், நம்முடைய கண்களுக்கு முன்பாகவும் கோமாளி அரசைக் கொண்டு பிடிங்கிக் கொண்டு செல்வதைக் காண்கிறோம்.
உணர்ச்சி வயத்தில் கூட்டத்தோடு சூழ்ச்சிக்கு இரையாகி பின்னால் திரும்பிப் பார்க்கும் பொழுது, இழந்ததை மீட்டெடுக்கவே மீண்டும் பல பத்தாண்டுகள் தேவைப்படலாம். முதலில் எதிரியை அடையாளம் காணுங்கள். யாரை அமர வைத்தால் தவறுகளை திருத்திக் கொண்டு சுயமான வளர்ச்சிக்கு நம்மை இட்டுச் செல்வார்களோ அவர்களை ஆதரியுங்கள். பிறகு உங்களுடைய பங்காளிச் சண்டையை வைத்துக் கொள்ளலாம்.

Wednesday, March 07, 2018

பெரியார் எப்போது யாருக்காக சாதி வெறியர் ஆனார்?: Periyar

தொலைக்காட்சி விவாதங்களில் அபாண்டமாக ஓர் உண்மைக்கு எதிராக பரப்பப்படும் பிரச்சார வாதங்களை சொல்லிவிட்டு, அதனை எதிர் தரப்பினர் அவர்கள் எத்தனை பொய்யர்கள் என்பதாக சான்றோடு எதிர் வாதம் வைக்கும் பொழுது- பொய்யர்களுக்கு ச்சீ இதுவும் ஒரு பொழப்பா என்று கூனிக் குறுகும் உடல் மொழியை காண்பதில் ஒரு சுவராசியம் இருக்கிறது.
அப்படியான ஒரு விவாதத்தை புதிய தலைமுறையில் கண்டேன். பெரியார் ஒரு சாதி வெறியர் என்றும், சாமி சிலைகளை உடைத்தார் என்றும் அப்பட்டமான ஒரு பொய்யை தான் சாமார்த்தியமாக எடுத்து வைப்பதாக வைத்து விட்டு நகர்ந்தார். அதற்கு பதிலுரைக்கும் விதமாக தொல். திருமா அவர்கள் மிக அழகான விதத்தில் அந்த உண்மையை எடுத்து வைத்தார். அப்பொழுது அந்த மய்யநிலையாளர் அவசரமாக தண்ணீர் எடுத்து அருந்திய விதம் பார்க்க கண் கோடி வேண்டுமென்பதாக இருந்தது.
பெரியார் சாதி வெறியை ஊட்டி வளர்த்திருப்பாராயின் எதற்காக அவரை நீங்கள் எதிர்த்திருக்க வேண்டும்? உங்களுடைய அரசியலே சாதிய கருத்தாக்கத்தில், பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையில் தானே ஆயிரம் ஆண்டு காலங்களாக ஒப்பேறி வருகிறது. அதற்கு வெடி வைக்க வேண்டித் தானே, அதன் ஆணி வேரான இறை நம்பிக்கை என்ற பெயரில் மனிதனை பிரித்தாளும் இடமான நீங்களே நம்பாத அந்த கடவுளர்கள் சன்னிதிக்குள் நீங்கள் விரும்பாத பிற இந்து மனிதர்களையும் அழைத்துக் கொண்டு நுழைய வேண்டி வந்தது.
அந்த ஊரில் உள்ள அனைத்து ஹோமோ செப்பியன்ஸ்ம் ஆலயத்திற்குள் நுழைய வேண்டுமென்றவர் எப்படி ஒரு சாதி வெறியர் ஆகிப்போனார்? பெரியார் என்ன நாட்டில் உள்ள அனைவரும் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக்க வேண்டுமென்றா ஓர் இயக்கத்தை நடத்தினார்? ஒரு முட்டாளுக்கு கூடத் தெரியும் அது எந்த நாட்டிலும் முடியாத விடயமென்று.
ஏனெனில் அதனின்று விடுபட சில அடிப்படை அறிவு விரிவாக்க பயிற்சி தேவைப்படுகிறது. மனத்திண்மை தேவைப்படுகிறது. எதனையும் கேள்விக்குள்ளாக்கும் ஆராய்ச்சி மனோபாவம் தேவைப்படுகிறது. இயல்பாக நமக்கு வருவது எந்த வித சலனமுமில்லாத தன் முயற்சியற்ற மரவட்டை வாழ்க்கை. அந்த ஓட்டத்தில் இத்தனை ஆழமாக சிந்திக்க திராணி ஏது?
எனவே பெரியார் நம் எல்லாரும் துணுக்குற்று முழித்துக் கொள்ளும் வகையில் எதனை எதிர்த்தால் கவனத்தைப் பெற முடியுமோ அந்த இடத்தை கேள்விக்குள்ளாக்கினார். அதிலொன்றுதான், தானே காசு கொடுத்து வாங்கி போட்டுடைத்த பிள்ளையார் சிலை உடைப்பு. அதனை அன்றைய நீதி மன்றமே கூட அவரிடத்தில் கேள்வி எழுப்பும் பொழுது என்னுடைய காசு நான் வாங்கி உடைத்தேன் என்றாராம்.
வரலாற்றிலிருந்து எதனை யாரிடமிருந்து மறைப்பதற்காக இத்தனை பொய்களை, இத்தனை அதிகார பீடத்திலிருந்து இயக்குகிறார்கள்? அப்படியாயின் யார் எதனைப் பெறக்கூடாது? இது இன்று நேற்று தொடங்கியதாக தெரியவில்லை. வீழ்ந்து கிடக்கும் ஒவ்வொரு 300, 500 வருடங்களையும் தாக்கு பிடித்து மீண்டும் மீண்டும் மனித மேன்மைக்கு எதிரான துரு பிடித்து நாசியை துளைக்கும் கேவலத்தை அரங்கேற்ற துடிக்கிறார்கள்.
அதற்கு உதவியாக ஜீன்ஸும், டிஷர்ட்டும் போட்ட புது யுக இளைஞ, இளைஞிகளும், கமலும், ரசியினும் இன்னும் புதுப்புது வேடமணிந்து தொடர் மனித மேம்பாட்டிற்கு எதிரான காட்டுமிராண்டி அடிமை தனத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போவது மனித இன அவலமன்றி வேறென்ன?

Sunday, March 04, 2018

பேரரசன் அசோகர்: பகுதி - 2 (அசோக சக்கரம்)

அசோக சக்கரமிருக்கிறது. இந்திய பாடப் பிரிவிலும் வாழ்க்கை முறையிலும் அசோகரின் வரலாறு எங்கே...?
அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதைத்து அழிக்கப்பட்ட வரலாற்றுச் சுவடுகளின் மீதங்களிலிருந்து புதிருக்கான விடையை அவிழ்ப்பது போல மிக்க சிரமமேற்று அந்த காலத்திய காலனிய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் நமக்கு வரலாற்றின் பக்கங்களிலிருந்து சுத்தமாக அழிக்கப்பட்ட விடயங்களை நம்முன் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்த நூலில் அது போன்ற ஆராய்ச்சியாளர்களின் முயற்சிகளை காணும் போது ஏன் அதற்கு பிறகான ஒருங்கிணைந்த இந்திய துணைக் கண்டத்தில் புதிதாக எதுவுமே கண்டுபிடிக்கப்பட்டு இணைக்கப்பட வில்லை என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே வருகிறது.
ஆனால் கச்சிதமாக நம்மிடம் கொட்டிக் கிடந்த தரவுகளையும், துணுக்குகளையும் பிற நாட்டவர் போரிட்டு அழித்தொழித்தது போதாதென இங்கு வாழ்ந்த பண்டிதர்களும் நிறையவே துடைத்தழித்திருக்கிறார்கள் என்பதாக தெரிகிறது.
இரண்டாயிரம் வருடத்திற்கு முந்திய எஞ்சிய கல்வெட்டுகளில் இருந்து அசோக சக்கரம் அந்த கால கட்டத்தில் ஆண்ட அசோகன் தொடங்கி அவன் வாரிசுகள் வரையிலும் பரவலாக பயன்பாட்டில் இருந்திருக்கிறது. இருப்பினும் பின் வந்த காலங்களில் வேத விற்பன்னர்கள் அடிப்படையான அசோகனின் சக்கரத்தை...
//...சக்கரம் ஒன்றைச் சுழற்றும் நிகழ்வு பழைய வேதகாலத்து புராணங்களையும் நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டது. வேத இலக்கியங்களில் தலைவன் காலத்தையே படைக்கிறார். அவனிடமிருந்தே அறவழி பிறக்கிறது. மகிழ்ச்சி பிரவாகமெடுக்கிறது.
இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் பரிணமிக்கிறது. பிராமண வேதங்களில் இந்தத் தலைவன் தன் கையில் ஒரு சக்கரம் கொண்டுள்ளான். அது அழிவுக் கருவியாக பகைவர்களைக் கொன்று குவிக்கும் எந்திரமாக செயல்படுகிறது. இதுவே இந்து மதப்பரிமாணத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் விஷ்ணு என்னும் கடவுளாக உருவெடுக்கிறது ...//
என்பதாக திரித்து நோகாமல் நொங்கு எடுத்து சாப்பிட்டு இருக்கிறார்கள் இந்த வேத விற்பன்னர்கள். சக்கரம் என்னவோ புத்த காலத்தில் அசோக பேரரசால் ஓர் அறம் சார்ந்த அரசின் குறியீடாக பயன்பாட்டிற்கு வந்தது பின்னாலில் விஷ்ணு வின் அழிவுக் கருவியாக திரிக்கப்பட்டு இருக்கிறது.
ஆங்கிலத்தில் plagiarism என்று கூறுவார்கள் அறிவுசார் திருட்டு என்பதாக தமிழ் படுத்திக் கொள்ளலாம். பார்க்கும் அளவில் தோண்டித் துருவி இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை ஒன்றிணைத்து பார்த்தால் நமக்கு இன்றைக்கு மத நூல்களாகவும், பெரிய பெரிய விஷ்ணு, பெருமாள் (அந்த சிலைகள் கூட புத்த சிலைகளாக இருக்க அனேக வாய்ப்புகள் உண்டு போல...) கோவிலாகவும் எழுந்து நிற்கும் அத்தனையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புத்த சமயத்திற்கென எழுதப் பட்டதும், எழுப்பப்பட்டதுமாக தோன்றுகிறது. அதனிலிருந்து அறிவுசார் திருட்டின் மூலமாக உருவியவையே இன்று நாம் கண்ணுரும் சில விடயங்கள்.
இந்த இடத்தில் ஓர் விடயம் குறிப்பாக கவனிக்கத்தக்கது. அசோகர் காலத்திய புத்த மதம் சார்ந்த விடயங்கள் அனைத்தும் பின்பு வந்த வேத விற்பன்னர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தாலும், பிற தேசங்களுக்கு சென்றடைந்த புத்த மதம் சார்ந்த குறிப்புகள் பெருமளவில் இலங்கையிலும் இருப்பதாக இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.
இதன் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் இன்றைய கால கட்டத்தில் நமக்குத் தெரியாத ஏதோ ஒன்று இனப் படுகொலையாளன் ராசபக்‌ஷேவிற்கு தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே விடாமல் திருப்பதிக்கு வந்து பெருமாளை தரிசித்து செல்கிறாரோ என்று எண்ணுகிறேன்.
நான் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த காலத்திலாவது அசோகர் மரம் நட்டார் என்று அளவிலும், ஆரிய, திராவிடர் வரலாறு பற்றியும் படித்தாக நினைவு. இந்த முப்பது வருட இடைவெளியில் அதிலும் குறிப்பாக கடந்த ஐந்தாண்டுகளில் எது போன்ற திரித்தல், இடைச் செருகல்கள் அதிலும் செய்யப்பட்டிருக்கிறது என்பது கவணித்து கொண்டிருப்பவர்களுக்கே வெளிச்சம்.

Wednesday, February 28, 2018

பேரரசன் அசோகர் - பகுதி 1 by தருமி

இந்த அத்தியாயத்தில் வரலாற்றை, புராணங்களின் வழியாக திருத்தி, இடைச்செருகல் செய்து தங்களுக்கு தேவையானதை செய்து வந்திருக்கிறார்கள் வேத விற்பன்னர்கள் என்பதாக தெளியவைக்கிறது.
இன்றைய காலத்தில் மோடி, எடப்பாடி, பன்னீர் போன்ற அடியாட்களை (ஷத்ரியர்களை) முன் நிறுத்தி வேலை நடத்திக்கொள்வது போலவே, ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பும் வேத விற்பன்னர்கள் அதே ஒட்டுண்ணி பாவனையில் வயிற்று பிழைப்பு நடத்தி இருக்கிறார்கள் என்பதும் இதன் மூலமாக தெளிவாகுகிறது.
இப்பொழுது கூட எடப்பாடிக்கு பக்கத்தில் ஒரு தேனீயின் சுறுசுறுப்புடன் ஒரு தலைமை செயலளாலர் சுற்றித் திரிவது நவீன ஏற்பாட்டின் ஓர் குறியீடு.
இத்துடன் அந்த நூலின் பக்கத்தை இணைத்துள்ளேன், அன்றும் இன்றும் அதே நிலைதான் நடந்தேறுகிறது. தவறாமல் வாசித்து விடுங்கள்.


Monday, February 26, 2018

பேரரசன் அசோகன் by ’தருமி’ மொழிபெயர்ப்பு

பேராசான் தருமி மொழி பெயர்த்த பேரரசன் அசோகன் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல் ஒன்றை வாசித்து கொண்டிருக்கிறேன். வாசித்து கொண்டிருக்கும் பொழுதே அடக்க முடியாத உந்துதலின் பேரில் ஒன்றை இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது (இது அந்த புத்தகத்திற்கான முழு நீள வாசிப்பனுபவமல்ல. முழுதும் வாசித்தவுடன் முழுமை படுத்தலாமென்று எண்ணியுள்ளேன்).
.
பல நூற்றாண்டுகளை அநாயசியமாக அந்த நூல் ஓரிரு பத்திகளில் கடந்து செல்கிறது. அந்த பத்திகளில் எது போன்ற அரசன் ஆண்டான் என்பதனைக் கொண்டு மக்கள் எது போன்ற வாழ்வுச் சூழலில் வாழ்ந்திருப்பார்கள் என்பதனை நினைக்கும் பொழுதே திகீர் என்கிறது.

அரசியல் சித்தாந்தமற்ற வர்ணாசிரம சூழ்ச்சியும், அதனையொட்டிய அண்டைய நாட்டு படையெடுப்பின் போது அந்த அரசு கவிழ்ந்து வேறு ஓர் அரசிற்கு கீழ் சில நூற்றாண்டுகள் ஆளப்பட்டு மீண்டும் வீழ்த்தப்பட்டுன்னு... காலச் சுழற்சியின் ஒவ்வொரு பக்கத்திலும் நிலையாமையை சுட்டியபடியே நகர்கிறது அந்த நூல். அடிநாதமாக பொதுத் தன்மையே நின்று நிலைக்கும் சித்தாந்தமென நிரவ முற்படுகிறது. வரலாறு மாற்றி எழுதப்பட்டாலும் நீடித்து நிற்பது அறம் சார்ந்த அரசாட்சியே!

அது நூல் அல்ல ஒரு பாடம் போல இருக்கிறது. அப்பட்டமான முறையில் ஒரிடத்தில் இந்திய துணைக்கண்டம் ஏன் நண்டு தனத்தினாலும், வர்ணாசிராமத்திற்கு அடிமைத் தனம் அடைந்ததாலும் அந்த தேசம் வரலாற்று சுவடுகள் தோறும் வீழ்த்தப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த பதிவு அந்த புத்தகத்திற்கான விமர்சனமாக நீண்டு கொண்டே செல்கிறது. இன்னும் முழுமையாக வாசித்து முடிக்காத நிலையில் அப்படி எழுதுவது அறமாகாது என்பதால் நிறுத்திக் கொள்ளலாம்.

சொல்ல வந்தது எப்பொழுதும் மனித வரலாற்றில் தொடர்ந்து அநீதிக்கும் நீதிக்குமான போராட்டம் நடந்து கொண்டேதான் வந்திருக்கிறது. குட் அண்ட் ஈவில்கான சமநிலை எட்டலில் எந்த கால கட்டத்தில் எந்த பக்கம் அதிகமான நல்ல/கெட்ட எண்ணவோட்டம் அதிகமாக குவிகிறதோ அதன் நீட்சியாக நாம் கண்டுணரும் செயல் பாடுகள் ஒரு சமூகத்துள் பாவி நிரையும்.

அநீதி ஓங்கும் பொழுது எதிர் முனையில் இருப்பவர்கள் சோர்வுற்று இனிமேல் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று ஒதுங்கிக் கொள்ள முடியாது. ஒரு சொட்டு நஞ்சு அற்ற தூய்மையான துளி என்றாலும் அது அடர்த்தியாக உள்ள நஞ்சுக் குடுவைக்குள் செலுத்தப்படும் பொழுது அதன் வீரியம் குறைக்கக் கூடியதாக அமைவதைப் போல ஆங்காங்கே தொடர்ந்து எழுப்பப்படும் அநீதிக்கெதிரான குரல்கள் அவசியம் (அது இன்றைய சிரியா, ஆதிவாசி மது, விழுப்புரம் ஆராயியின் குடும்பம் என்பதாக நீள்கிறது...).

ஆகவே, மக்களே தொடர்ந்து பேசிக்கொண்டே இருங்கள். சிறு துளி பெரு வெள்ளம்.

Thursday, February 22, 2018

திராவிடத்தால் வாழ்ந்தோம்: Impact of Dravida Movement

திராவிட ஆட்சிகாலங்களில் ”அ, ஆ, இ, ஈ...” என்று
பள்ளிகளுக்கு சென்று படிக்க ஆரம்பித்தவர்களுக்கு...

ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். என்னை போன்ற ”இந்தியா 2” (have not) பகுதியிலிருந்து படித்து முன்னேறியவர்களின் அறைகூவலிது. திராவிட இயக்கம் மட்டும் தோன்றாமலிருந்து இருந்தால் இன்னமும் நானெல்லாம் ஏதாவது ஒரு பொட்டல் காட்டில் ஆடு, மாடு மேய்த்து கொண்டிருப்பேன்.

ஹிந்துத்துவா பிள்ளை பிடிப்பவர்கள் என் கையில் ஒரு காவி கொடியை சொருகி அவனை அடி, இவனை பிடி என்று ஏவும் வேலைகளை செய்து கொண்டிருப்பேன்.

எதுவும் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாதுதானே? அப்படி கிடைத்துப் போனால் அதற்கு பின்னான உழைப்பின் மகிமையை நாம் உணர்ந்திருக்க மாட்டோம் தானே?

அந்த இடத்தை நாம் அடைய நிறைய இழப்புகளை நமக்கு முன்னானவர்கள் அனுபவித்திருப்பார்கள். அதன் பலனை மட்டும் நாம் அனுபவிக்க அனுபவிக்க நம் பாதையின் அருமை மறப்போம்... அப்பொழுதான் இந்த குறளை நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.

உரை: ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.
**********************

வரலாறு வாசிக்கிற நேரம் வந்திருச்சு. மேலோட்டமான திரித்தலுக்கு மீண்டும் பலியாகிவிட்டால் மீண்டு எழ பல யுகங்கள் ஆகலாம். ஆழ சிந்திக்க வாசிப்பு அவசியம். இதுவே தூசி தட்ட சரியான தருணம்.

பிக் பாஸின் நட்ட நடு செண்டர் மய்யம் ஓஆர்ஜி: Maiam

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம்னு ஒளி வெள்ளத்திற்கு கீழே நிற்கும் மாய நட்சத்திரங்களெல்லாம் இன்று ”ஒரு மாதிரி பேராசையில்” கிளம்பி வந்திருக்கிறது. அப்படி ஆசை வரவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும் என்றாகிவிட்டது.

காந்தி சென்னார் என்று தீவிர நடுநிலை வாதியான கமல் சார் மேற்கோள் காட்டியது, ”மனிதனின் தேவைகளுக்கு வேண்டுமானால் இந்த பூமி தன் வளங்களை வழங்கலாம் ஆனால் பேராசைக்கு வழங்க முடியாது.” இது கமலுக்கே பொருத்தமான ஒன்றுதானே! சரிதான். இவரின் சிறிய வயது ஆசையான நடிப்பு உலகில் தான் ஓர் இடத்தை அடைய வேண்டுமென்று உழைத்து அவராலான அளவில் புகழையும் ஈட்டி திருப்தி அடைந்து விட்டார்.

இப்பொழுது எந்த இசங்களையும் பின் பற்றி மக்களுக்கான பொதுச் சேவை ஆற்ற வேண்டிய நிலையில் இந்த நாடும், நாட்டு மக்களும் இல்லை, வெறும் ஊழலற்ற(?) அரசாட்சி மட்டுமே வழங்கினாலே போதுமானது என்று புதுப் படம் எடுப்பதனைப் போன்று ஒரு கட்சியையும், அதற்கான கொடியையும் ஏற்றி ஸ்ரீப்ரியா, ஸ்நேகன், பரணி, வையாபுரி போன்ற மொழி போராட்ட மற்றும் பொருளாதார மேதைகளை மேடையேற்றி இன்னொரு “பிக் பாஸ்” பாணியில் மக்களாட்சியில் பணியாற்ற தொடங்கி இருக்கிறார்.

இத்தனை ஆண்டுகள் இஞ்ச் பை இஞ்சாக நகர்த்தி இன்று நாம் அடைந்திருக்கும் இந்த ஜனநாயக உரிமைகளை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் புறந்தள்ளி மின்னும் ஒளி வெள்ளத்தின் கீழ் ஊழலாக சுருக்கி நீட், காவேரி நதி நீர் பங்கீடு, இயற்கை வளங்களை புரட்டி போட்டு சாமியார் வளம் பேணல், ந்யூட்ரினோ திட்டம் என்பனவற்றை புட்டியில் அடைத்து கடலில் வீசி விட்டு மூளைச் சலவை செய்ய எத்தனிக்கிறார்.

யாரை வேண்டுமானாலும் நம்பலாம் ஆனால் தனக்கு நடிப்பு நன்றாக வரும் என்ற ஒற்றை காரணத்தை முன் வைத்து வரலாற்றை மறக்கடித்து கண்ணுக்கு முன்னால் அடைந்திருக்கும் வளர்ச்சிகளை குறுக்கி, மற்றுமொரு பீகாராகவும், உத்திர பிரதேசமாகவும் எல்லா துறைகளையும் பின்னுக்கு இழுத்துப் போக நினைப்பவர்களுக்கு துணை நின்று “மதுரை டயலக்” பேசி ஓட்டு அரசியல் பண்ணி விடலாம் என்று நினைப்பது எந்த விதத்தில் சேர்ப்பது?

மக்களை எந்த அளவிற்கு குறைத்து மதிப்பிட்டிருந்தால் இப்படியான ஒரு “மேனாமினிக்கி” அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு கட்சி தொடங்க ஆசை வந்திருக்கக் கூடும்?

ரசினியும் சரி கமலும் சரி இரண்டும் வேறுவேறல்ல ஒரே குட்டை மட்டைதான். வரலாற்று ரீதியாக, சரியாக இந்தியாவில் தமிழகத்தின் நிலை எங்கிருந்து எங்கு நகர்ந்து வந்திருக்கிறது என்று பிடிபடாத அந்த அப்பாவி மக்களை ஒரு பிள்ளை பிடிப்பவனின் சாதுர்யத்துடன் இவர்களை பிஜேபி உள்ளே நுழைந்து கிடைச்ச வரையும் லாபம் என்ற நோக்கில் சுருட்ட நினைக்கிறது.

இது போன்ற ஒரு சூழல் வந்ததிற்கு இது வரையிலும் ஆட்சி செய்து வந்த கழகங்களே காரணம். தேசிய அளவில் தமிழகத்தின் உண்மையான வளர்ச்சி என்ன அது எப்படி சாத்தியமானது, எது போன்ற போராட்டங்களை முன்னெடுத்து நம்மால் இந்த நிலையை அடைய முடிந்தது போன்ற விடயங்களை கட்சி பாராபட்சமின்றி எடுத்து கொண்டு சேர்க்காததே முதன்மையான காரணம்.

கழக ஆட்சி மட்டும் 1969க்கு பிறகு தோன்றாமல் இருந்திருந்தால் நான் இன்று அடைந்து இருக்கும் இடத்தை இன்னும் இரண்டு பிறப்பு எடுத்தாலும் அடைந்திருக்க முடியாது. என்னை போன்றுதான் இங்குள்ள அரிதி பெரும்பாண்மையான தமிழக மக்களுக்கும் என்றே நினைக்கிறேன்.

இல்லையென்றால் பிகாரிகளும், ராஜாஸ்தானிகளும் உத்திரபிரதேசக்காரர்களும், ஹர்யானகாரர்களைப் போன்றும் நானும் தேடித் தேடி மாமிசம் உண்பவர்களையும், காதலர் தினத்தன்று ஜோடியாக நடந்து செல்பவர்களை சாலையோரத்திலும், உணவு விடுதிகளிலும் ஏன் எதற்கு என்று தெரியாமலேயே அடித்துக் கொன்று போடுபவர்களில் ஒருவனாக ஒரு படிப்பறிவற்ற காட்டுமிராண்டியைப் போல வாழ்ந்து கொண்டிருப்பேன். இந்த வேலையில் என்னை நாகரீக மடைந்தவனாக மடைமாற்றம் செய்த பகுத்தறிவாத முன்னோடிகளுக்கு நன்றி செலுத்தாமல் வேறு எந்த சூழ்நிலையில் செய்வேன்.

இன்னமும் கமல் போன்றவர்களை இத்தனை உயரத்தில் வைத்து அண்ணார்ந்து பார்க்கும் நிலையில் நாம் இருக்கிறோம் என்றால் இன்னமும் நாம் போக வேண்டிய தொலைவு மிச்சமிருக்கிறது என்றுதானே புரிந்து கொள்ள முடிகிறது.

இவர் மிகச்சரியாக அரசியல் செய்ய வேண்டிய இடம் பிகார். கேஜ்ரிவாலை அழைத்துக் கொண்டு அடுத்த பிரதம மந்திரியாக தயாராகிக் கொண்டிருக்கும் யோகி, இன்றைய வாய்ச்சவடால் மோடிக்கு எதிராக பிற மாநிலங்களில் சென்று குறைந்த பட்சம் நாகரீகமாக உலக அரங்கில் முன் நிறுத்தி செல்ல அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை கல்வியறிவு, வாழ்வாதரங்களை அமைத்து கொள்ள வகுப்பு எடுக்கட்டும்.

இது தமிழகத்திற்கு தேவையற்றது! இப்பொழுது என்னால் யூகிக்க முடிகிறது இது போன்ற ஓநாய் கூட்டங்களுக்கு இடையே இத்தனை ஆண்டுகள் ஓர் இயக்கத்தை வழி நடத்தி சென்றிருக்க வேண்டுமானால் எத்தனை சாதுர்யம் தேவைப்பட்டிருக்கும். விழித்தெழு!

Related Posts with Thumbnails