Tuesday, November 08, 2011

கூடன்குளமும் அணுக்களின் நண்பர் அப்துல் கலாமும்...

பாரதம் அகன்று விரிந்த நிலப்பரப்பினை உடைய ஒரு நாடு. கனவு காணச் சொன்ன நமது ஏரோநாடிகல் அறிவியல் விஞ்ஞானியும் முன்னாள் குடியரசு தலைவருமான டாக்டர். அப்துல் கலாமின் ஆய்வறிக்கையை மக்கள் மிகவும் ஆவலோட எதிர்பார்த்திருந்தார்கள். அதற்கு முன்னதாகவே ஓரளவிற்கு நம்மாலும் யூகிக்க முடிந்தது அவரின் இறுதி வார்த்தை என்னவாக இருக்குமென்று. நமது எதிர்பார்ப்பு பொய்த்துவிடவில்லை. அவரின் அணுகுண்டு சாதனைக்கு பின்னாக நம்மை பாகிஸ்தானிடமிருந்து காத்த அதே உத் வேகத்துடன் இப்பொழுது கூடன்குளத்தில் அணு உலை நிறுவி தமிழகத்திற்கும் அதனையொட்டிய அணி சாரா மாநிலங்களுக்கும் தங்குதடையற்ற மின்சார உற்பத்தியை பகிர்ந்தளித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகோணும் வாக்கில் இந்த அணு உலை நிரூவப்படுவதின் அவசியம் நம் மக்களுக்கு முன் எடுத்து வைத்திருக்கிறார்.

அதற்காக மிக நீண்ட நாற்பது பக்க அளவில் தன்னுடைய ஆய்வறிக்கையாக அவரின் கருத்துக்களை இப்பொழுது முன் வைத்திருக்கிறார். நல்லது! என்னால் அத்தனை பக்கங்களையும் அவ்வளவு பொறுமையாக அமர்ந்து வாசிக்க முடிய வில்லை. ஏனெனில், அணுக்கதிர் வீச்சின் தாக்கத்தை பற்றியான பாதகங்களில் அவர் எடுத்து முன் வைத்திருக்கும் உதாரணமாக ஹிரோஷிமா மற்றும் நகசாகி விடயத்தில், அந்த வீச்சு பின் வரும் தலை முறைகளுக்கு எந்த பாதிப்பையும் வழங்கியதாக தெரிய வரவில்லை என்று முழு பூசணிக்காயை எதுக்குள்ளோ வைத்து மறைத்து கொடுப்பது மாபெரும் வரலாற்று பிழையாகவும், பாவமாகவும் கருதுவதால் மேற்கொண்டு என்னால் ஏனோ வாசிக்க முடியவில்லை.

நான் ஏற்கெனவே அண்மையில் நிகழ்ந்தேறிய ஜப்பானிய அணு உலை விபத்தினையொட்டி இப்படியாக ஜப்பான் அணு உலைக்குள் உலகத்திற்கான செய்தி: Nuclear Reactor!! கட்டுரை எழுதி சில முக்கியமான கேள்விகளையும் முன் வைத்திருந்தேன். இந்த சூழலில் இப்பொழுது கூடன்குளம் அணு உலை இயக்கப்படக் கூடிய கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. ஜெர்மனி மற்றும் சில விழித்துக் கொண்ட ஐரோப்பிய நாடுகள் இதே அணு உலைகளுக்கு எதிரான ஒரு நிலைக்கு நகர்ந்து தூய்மையான ஆற்றல் (clean energy/eco friendly) பயன்படுத்தப்படுவதின் அவசியமறிந்து, இருக்கும் உலைகளையும் எப்படி கவணித்து மேலாண்மை செய்வது என்ற கவலையில் ஆழ்ந்திருக்கும் ஒரு கட்டத்தில் நமது கனவு கலாம் அவர்கள், மிக வேகமாக நாட்டை முன்னேற்றுவதற்கான வழிகளில் இதுவும் ஒன்று என்று ஒரு நாட்டின் இதர பகுதி மக்களுக்கென ஒரு மாநிலம் பலியிடப் பட்டாலும் தவறில்லை என்ற நோக்கில் மிகச் சாதாரணமாக தியாகிகளாக அறைகூவல் விட்டிருக்கிறார் அந்தப் பகுதி மக்களுக்கு.

அதற்கென அவர் இட்டுக்கட்டிய உதாரணங்கள் அணைகள் கட்டப்படும் பொழுதும், ஏரோ பிளேன் கண்டிபிடித்த பொழுதும், உயர்ந்த கட்டிடங்கள், இதர மனித சாதனைகளுடன் இந்த அணு சார்ந்த விசயத்திலும் மனித இனம் உற்சாகத்துடனும், மனத் துணிவுடனும் இறங்கி செயலாற்ற வேண்டுமென்று கூறியிருக்கிறார். எனக்கு என்ன விளங்கவில்லையெனில்... அவர் சுட்டிக்காட்டிய அனைத்து விசயங்களிலும் அசம்பாவிதங்கள் நிகழும் கனம் தோறும் பாதிப்பு உடனடியாக அதன் அருகாமையில் இருப்பவருக்கு மட்டுமே நிகழக் கூடும். உயிர் பாதிப்பும் பெருமளவில் இல்லை, அதனை தலைமுறைகளாக கடத்தப் பெறுவதும் கிடையாது என்பதுதான். இந்த அணுக்களை உள்ளடக்கி ஒரு சூட்கேசுக்குள் கொண்டு வரும் சக்தியின் வீரியத்தின் மகத்துவத்தை, இப்பொழுது நாம் டன் கணக்கில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலக்கரியினை எரித்து பெறப்படும் சக்தியின் ஆற்றலோடு ஓப்பிட்டு செய்யும் அதே கனத்தில் அதன் அழிவின் வீரியத்தையும்/வீச்சத்தையும் நாம் ஏன் யோசிக்க தவறுகிறோம்?

அணுக் கதிர் வீச்சு காற்றின் மூலமாக பரவி உடனடி விளைவுகளை உருவாக்குவதோடு, மனிதனின் மரபணுக்களின் கட்டமைப்பு வரையிலுமாக ஊடுருவி சிதைத்து பல தலைமுறைகளுக்கு பிறக்கும் சந்ததியினரின் உடல் உள்/வெளி உறுப்புகளின் செயல்பாடுகளிலும், அமைப்புகளிலும் எண்ணற்ற விதங்களில் விளையாடி விடுகிறது. அதற்குச் சான்றாக எத்தனையோ காணொளிகள் ஹிரோஷிமா/நகசாகி நிகழ்விற்கு பிறகு இரண்டாம் தலைமுறையிலும் வெளிக் காண்பதனை நம்மால் கவனத்தில் நிறுத்த முடியும்.

அதெப்படி இத்தனை ஆபத்து நிறைந்த ஒரு தொழில்நுட்பத்தை நூறு சதவீகிதம் பாதுகாப்பானது என்று சொல்லிவிட்டு போக முடியும்? 15 வருடங்கள் அந்த அணு உலைகள் கட்டுவதற்கான பொழுதென்றால் அதன் பயன்பாடு வெறும் 50 வருடங்களே இருக்கிறதாம். அதற்கு பிறகு ஸ்விட்ச் ஆஃப் செய்திவிடுவோமென்று திருகியும் அந்த ஆலையை மூடி விட முடியாது. காரணம் ஒரு முறை அந்த அணுக்களின் இயக்கம் தொடங்கிவிட்டால் அதுவாக வீரியமிழந்து அயர்ந்து போகும் வரையில் தொடர்ந்து செயல்பாட்டிலேயே இருக்கிறதாம்; பத்தாயிரம் வருடங்களை தாண்டியும். அதனை மேலாண்மை செய்து பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்வதற்கே சொற்பமான நிதி ஒதுக்கீடு செய்து வைக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு என்று வரும் பொழுது நமக்கெல்லாம் மணி அடிக்கணுமே, அந்த பணம் எப்படி செலவழிக்கப்படும் எதிர்காலத்திலென்று.

சில தொழிற் நுட்ப தேவைகளுக்கென கடற்கரையை ஒட்டியே இது போன்ற அணு உலைகள் கட்டியெழுப்பப்படுகிறது. அதாவது இந்த அணு உலைகளின் இயக்கத்தின் போது உருவாகும் அதீதமான வெப்பத்தினை தணிப்பதற்கென தொடர்ந்து குளிர்வான நீர் உள்ளே சென்று வெளிப்புக வைக்கப்படுகிறது, வெப்பமூட்டப்பட்ட நீர் மீண்டும் கடலுக்குள் தள்ளப்படுவதோடு அதனூடாக தடம் கண்டுபிடிக்க தக்க கதிர்வீச்சும் (traceable amount of radiation) கடல் நீரோடு கலக்கப்படும் வாய்ப்பிருப்பதால் அங்கு வாழும் உயிரினங்களுக்கு சென்றடைகிறது, அதனை உட்கொள்ளும் நமக்கு சிறிது சிறிதாக நச்சூட்டப்பட்டு விதவிதமான புற்று நோய் வெளிப்பாடுகள் அறியப்படலாம்.

இந்தியாவில் மொத்தம் எத்தனை அணு உலைகள் இது வரையிலும் உள்ளது? எத்தனையோ பிற கடற்கரையையொட்டிய மாநிலங்கள் இருந்தாலும் இரண்டாவது அணு உலை இங்கே தமிழகத்தில் நிறுவப்பட்டதின் சூட்சுமம் அதன் பாதுகாப்பு கருதியே என்று எண்ணுகிறேன். அதாவது எதிரி நாடுகளின் எட்டித் தொடும் தூரத்திலிருந்து விலகி அமைப்பதற்காக குறிப்பாக பாகிஸ்தான் போன்ற துஷ்ட நாடுகளின் தொட்டு விடும் தூரத்திலிருந்து என்று வைத்துக் கொள்வோம். ஆமா, அதான் இப்போ பாகிஸ்தான், சைனா போன்ற நாடுகளுக்கெல்லாம் ஸ்ரீலங்காவிற்கு நல்ல நண்பராகிப் போனதே அதே பயம் ஏன் இப்பொழுது இங்கும் வரவில்லை? அது அப்படியே இருக்கட்டும்.

அடுத்து ஏதாவது எசகு பிசகாக மனித தவறுகளோ, எந்திர கோளாறுகளாலோ, அல்லது தவிர்க்க/அணுமானிக்க முடியாத இயற்கைச் சீற்றத்தால் அணு உலைக்கு சேதம் நிகழ்ந்து போனால், மக்களுக்கென எது போன்ற பாதுகாப்பு வசதிகள் அவர்களை அந்த ஏரியாவில் இருந்து நகர்த்தி வெளி எடுத்துச் செல்லுவதற்கென திட்டங்கள் வைத்திருக்கிறோம். மேலும் இது போன்ற கண்ணுக்கு புலப்படாத கதிர்வீச்சுகள் காற்றிலும் பரவும் குணம் கொண்டதால் அணு உலைகள் எழுப்பப்படும் இடத்தை சுற்றிலும் ஒரு குறிப்பிட்ட மக்கட் தொகைக்கு மேலாக இருக்கக் கூடாது என்பதும் உலக அணு உலை அமைப்பு சட்டத்திலும் ஏதாவது இருக்கக் கூடுமே, அது இங்கே பயன்பாட்டில் உள்ளதா?

அமெரிக்காவில் ஒரு முறை ஆந்தராக்ஸ் புரளியில் இருந்த சமயம், உடனடியாக மக்களிடத்தில் கொந்தளிப்பு எல்லா கடைகளிலிலும் ஜன்னல், கதவோர ஓட்டைகளை அடைப்பதற்கான டக்ட் டேப் வித்து தீர்த்தது. அத்தனை கல்வியூட்டு, மற்றும் விழிப்புணர்வோடும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் அதற்கென முன்னெச்செரிக்கையோடு தற்காலிகமாக பாதுகாப்பினை தரும் வீடுகளின் கட்டமைப்பையும் கொண்டிருக்கிறது. ஆனால், இன்னமும் நம்மூரில் ஓட்டு வீடுகளும், குச்சியால் வேய்ந்த ஓலை வீடுகளையும் கொண்ட அமைப்பில் இது போன்ற ஓர் அசம்பாவிதங்கள் நிகழுமாயின் எத்தனை தூரம் தாக்கு பிடிக்க முடியும்? அல்லது மக்களுக்கு உண்மையாக அணுக்கதிர் வீச்சு என்றால் என்ன, அது எது போன்ற விளைவுகளை உருவாக்க வல்லது போன்ற அடிப்படை விழிப்புணர்வு வழங்கப்பட்டிருக்கிறதா? பொது ஜனங்களின் நிலைப்பாடு அதன் உண்மையான சாதக/பாதகமறிந்து முழு மனதுடன் அதனை எதிர் கொள்ளும் நிலைக்கு நகர்ந்திருக்கிறார்களா?

இதோ அவர்கள் செய்கிறார்கள், இவர்கள் செய்கிறார்கள் என்று புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வதனைப் போலில்லாமல், லஞ்சம் வாங்கிய அரசு/அரசியல் ஊழியரின் நிலையறிந்து அதனை அரசாங்கமே 10 அல்லது 20% லஞ்சம் வாங்கியவர்களின் ஓய்வூதியத்தில் பிடித்து கொள்ளும் என்ற நிலைக்கு நகர்ந்திருக்கும் ஒரு கேடு கெட்ட நிலையில் இது போன்ற அதி முன்னெச்செரிக்கையும்/திட்டமிடலும் தேவைப்படும் ஒரு ஹை ரிஸ்க், நச்சு தொழிற் நுட்பம் இந்த சமூக பின்னணியில் நமக்குத் தேவையா?

மாறாக வருடத்தின் 300 நாட்களிலும் அடித்து கொளுத்தும் சூரிய வெப்பக் கதிர்களிலிருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான மின் உற்பத்தியை பெறத் தக்க சோலார் பானல் திட்டத்தினையும், காற்றாலை, ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டங்களையும் (Wind, Water and solar) மேலும் முடிக்கி விட்டு சுற்றுப்புறச் சூழல் பேணலுடன் மக்களின் ஆரோக்கியம் பேணும் திட்டங்களில் இந்த 42,000 ஆயிரம் கோடிகளை கொட்டினால் என்ன? இதன் மூலமாக இந்த அணு உலையின் இயக்கம் 50 வருடங்களுக்குப் பிறகு மண்டையடியுடன் வைத்து மேய்ப்பதற்கென செலவும், ரிஸ்கிலிருந்தும் தப்பிக்கலமால்லவே!

இந்த மொத்த திட்டமும் எனக்கென்னவோ கண்ணை இழந்து சித்திரத்தை வாங்குவதற்கும், கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்து கொள்வதற்கும் இணையாகவே வைத்து பார்த்துக் கொள்ளத் தோன்றுகிறது.

கீழே உள்ள படம் இப்போ ஜப்பானில் நடந்த அணு உலை கசாமுசாவில் கடலின் மறுகோடியில் இருக்கும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திற்கு 10 நாட்களுக்குள் ட்ரெசபில் கதீர்வீச்சு அறியப்பட்டதாக புரெஜெக்ட் செய்யப்பட்டது...



மேலும் வாசிக்க:

1) டாக்டர் அப்துல் கலாம் -  

Nuclear power is our gateway to a prosperous future

2) பேரா - டிரேந்திர ஷர்மா - Why Say NO to Nuclear – Prof. Dhirendra Sharma 


4) நமது பதிவர் கையேடு (இயற்பியலர்) - 

இந்தியா - அமெரிக்க அணு உடன்படிக்கை மற்றும் இந்திய அணு ஆற்றல்..!!??



Sunday, October 30, 2011

மேட்டிமைத்தனம் + போலி அறிவியல் = ஏழரை அறிவு!

அது என்னப்பா ஏழாம் அறிவு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லி படமா வருதேன்னும், ஹாரீஸ் ஜெயராஜ்வோட இசையும் கொஞ்சம் கவனிக்க வைச்சிருந்ததாலும் ஏதோ ஓர் உந்துதல் இந்த படத்தை பார்க்கணும்னு. பார்த்தேன். இரண்டும் கெட்டான் அப்படிங்கிறதுக்கு மிகச் சரியா பொருளைக் கொடுத்த படமிது!

பிறகு எதுக்கு இதைப் பத்தி எழுதி நேரத்தை வீணடிக்கிறன்னு கேட்டீங்கன்னா, கண்டிப்பா பேசப்படணும். ஏன்? ஓரளவிற்கு உயிரியலையே மேஜரா எடுத்து படிச்ச என்னயே பாதி வழியே படம் பார்த்திட்டு இருக்கும் போதே ஒரு தற்குறியா உணர வைச்ச படமாச்சே அதுனாலே மத்தவிங்களுக்கும் மணி அடிச்சு அப்படி ஃபீல் செஞ்சிராதீங்க இதுவும் ஒரு சாதாரண தமிளு படமின்னு சொல்லவாவது உதவட்டுமேன்னு இதை எழுத உட்கார்ந்திருக்கேன்.

இந்த அளவிற்கு பணத்தை கொட்டி எடுக்குறீங்கன்னா, ஒண்ணு முற்று முழுதுமாக உண்மையான வரலாற்று உண்மைகளை (அப்படின்னு ஒண்ணு இருந்தா) உள்ளடக்கி அதை மக்களுக்கு கொண்டு போயி சேர்க்கும் முயற்சியில் படத்தை கொடுங்க, அதே மாதிரி அறிவியல் பேசுறீங்களா அடிப்படை விசயங்களை புரிஞ்சிட்டு அதுக்கு மேலே அதில நிகழ்த்தக் கூடிய விசயங்களா கற்பனையை கலந்து கொடுங்க. இரண்டுமே இல்லாம மொட்டையன் குட்டையில விழுந்த மாதிரி ஏற்கெனவே அடிப்படை அறிவியல் அறிவு இல்லாத ஒரு சமூகத்திற்கு எது போன்ற எண்ண விதைகளை விதைப்பீர்கள்?

இந்த படத்தையெல்லாம் இத்தனை தீவிரமாக எடுத்துக் கொண்டு விமர்சனம் எழுதுவது என்பது கண்ணில்லாத குருடன் யானையைத் தடவின மாதிரிதான் இருந்தாலும், பேசப்படுவதின் மூலமாக அடுத்து இதே வழியில் இறங்கி பணம், புகழ் சம்பாரிக்க எண்ணுபவர்களுக்கு ஒரு இரண்டாவது யோசைனையாக இருக்கட்டும் என்றளவிலாவது பேசப்படுவது அவசியமாகி விடுகிறது.

இந்தப் படத்தில 1600 வருடங்களுக்கும் முன்பாக வாழ்ந்த போதி தர்மர் என்ற தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட ஒரு துறவியைப் பற்றி நமக்கெல்லாம் தெரியவில்லை என்ற அவமான உணர்வுடன், குற்ற உணர்வு கொள்ளச் செய்யும் பீடிகையுடன் தொடங்கும் படம் மலை, காடுகள், ஆறுகள் வழியாக பயணித்து பின்பு மரபணு பாடம் எடுக்க எத்தனிக்கிறது.

எனக்கு அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. அப்படியே ரெகுலர் சினிமா மசாலாத்தனமாக ஓட்டி முடித்திருந்தால் என்னிடமிருந்து இப்படி ஒரு கட்டுரை வந்திருக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. மரபணு அறிவியல் சார்ந்த அடிப்படை அறிவு என்னவென்றால் - பரம்பரை வியாதிகள், முடி, கண்ணின் நிறம், உடற் சார்ந்த ஒற்றுமைகள் மரபணு வழி கடத்தப் பெறலாம் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு பரம்பரை பரம்பரையாக.

அதே நேரத்தில் எனது தாத்தன் தொடர்ந்து பல மணி நேரங்கள் தண்ணீர் அடிக்கும் பம்ப் செட்டில் 1000 குடங்களை அடித்து நிறப்பும் திறன் கொண்டவர், எனது அப்பா பெரிய கால்பந்து வீரர், மஹாத்தமா, அறிவியல் விஞ்ஞானி, பேராசிரியர் போன்ற புற பண்புகள் அதாவது முயன்று பெற்ற திறமைகள் கடத்தப் பெறுவது கிடையாது என்பது கண் கூறு, அனுபவ வழி உண்மை. இதுக்கு பெரிதாக அறிவியல் ஆராய்ச்சிகள் கூட தேவை இல்லை. வீட்டிற்குள் நிகழும் விசயங்களை கொண்டே புரிந்து கொள்ள முடியும்.

இந்த படத்தில் போதி தர்மா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக முயன்று பெற்ற பண்பான கம்பு சுத்துறது, தொடர்ந்து பல மணி நேரங்கள் சுவற்றை உற்று நோக்குவது, வியாதிகளுக்கு மருத்துவ மூலிகைகளைக் கொண்டு குணப்படுத்துவது போன்ற விசயங்களை இருபது தலைமுறைகளை தாண்டி வந்த படத்தின் கதாநாயகனுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது என்பதாக கூறி ஜல்லி அடிப்பதனை தாங்க முடியவில்லை. இது போன்ற பண்புகள் கடத்தப்படக் கூடியதுதான் என்று புதிதாக எதுவும் ஆராய்சிகளின் மூலம் கண்டறிந்திருக்கிறார்களோ என்று ஒரு நிமிடம் என்னயே அதிர்ச்சியடைய வைத்தது என்றால் மிகையில்லை.

அதனை சப்பை கட்டும் விதமாக கதாநாயகி, இது போன்ற பரம்பரை குணங்கள் தலைமுறையாக கடத்தப்பெறுகிறது என்று வேறு அழுத்தம் திருத்தமாக கூறுவார். அடக் கொடுமையே! ஏற்கெனவே ஊர்க் காடுகளில் டேய் என் முப்பாட்டான், தாத்தா யார் தெரியுமாடா என்று மூடத்தனமாக ஒட்டு பீடிக்கு அருவா தூக்கும் இன்றைய இளைஞர்கள் வாழும் ஒரு சமூகத்திற்கு நவீன அறிவியல் பேசும் ஒரு படத்தில் அதே போன்ற மொண்ணை பேசும் வச்சனம் தேவையா? அது உண்மையா?

இந்த லட்சனத்தில் சமூகத்திற்கு ஏன் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஏதோ பெரிய பெருமை சேர்க்கும் விசயத்தை உள்ளடக்கி வந்திருக்கிறது என்று கூவிக் கொண்டு டிக்கெட் வித்து தீத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தனை அறிவையும் உள்ளடக்கிய பல ஞானிகளை பெற்றெடுத்த பூமியில் தான் இன்னமும் ஜாதி என்ற பெயரில் நடந்தேறும் அத்தனை வெட்டுக் குத்துகளும், அநீதிகளும் அதே ஞானிகளின் காலத்திலிருந்து இன்றைய அப்துல் கலாம்கள் வாழும் நாள் வரையிலும் நீட்டித்து நிற்கிறது. அதே அடிப்படை வாத பிரிவினைகளைக் கொண்டே இதோ நேற்று ஆயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட ஈழ மக்களுக்கான அநீதியும் அடக்கம். இவைகளே உண்மையாக பேசப்பட வேண்டிய பாடங்கள், படங்கள்?

இது போன்ற பிரச்சினைகளை முகத்திற்கு முகமாக பேசக் கூடிய படங்கள் ஒன்றையும் காணோம். உயிரியல் தொழி நுட்பத்தை பயன்படுத்தி வரப் போகும் நவீன போர் உத்திகளை பற்றி பேசியமையும், எப்படியாக அது போன்ற நோய்கள் மிக விரைவில் பரவி மக்களை சென்றடையும் என்று இந்த படம் காட்டிய வரைக்கும் சரி, அது போலவே தாய் மொழியில் பயின்று, பேசி அறிவியல் ஞானத்தை எட்டுவது என்பதுமாக இரண்டு நேர்மறையான எண்ணங்களை கொண்டு சேர்ப்பது இந்த படத்தில் கவணிக்க வேண்டி விசயங்கள் என்றால் - நேர் எதிராக பல விசயங்கள் மூட/மேட்டிமை மயக்கத்தை தூவி, நிரூவி நிற்கிறது.

1600 வருடங்களுக்கு மேலாக நம் கூடவே நடந்து வரும் ஒரு மாபெரும் விசயம் நமது சமூகத்திற்குள்ளாகவே மக்களை பிளவு படுத்தி, அடிமை சாசனத்தில் வைத்திருக்கும் மக்களுக்கான விடியலான தீர்வு இட ஒதுக்கீட்டு விசயம். அதனை இந்தப் படம் போகும் போக்கில் இந்தியா இழிவான நிலைக்கு போவதற்கான அடிப்படை பிரச்சினைகளான ஊழல், சிபாரிசு மற்றும் இட ஒதுக்கீடு என்ற கேடுகெட்டவைகளில் ஒன்றுடன் இணைத்துச் செல்கிறது. என்னவோ, இந்த இட ஒதுக்கீட்டிற்கு முன்பாக பாலாறும், தேனாறும் இந்த சமூதாயத்தில் ஓடிக் கொண்டிருந்த மாதிரியும் அந்த மக்கள் அனைவரும் அப்பொழுது வேற்று கிரகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்ற ரீதியில் விசயத்தை மிகவும் எளிமை படுத்திச் செல்கிறது.

அதற்கு பின்னான அவசியமும், ஒரு நாடாக, ஒரு இனமாக மேலேழும்ப வேண்டுமாயின் சமதளம் எப்படியாக பரப்பபப் பட வேண்டுமென்ற அடிப்படை தேடல் கூட இல்லாது அப்படி ஒரு மேட்டிமைத் தன எள்ளலுடன் இட ஒதுக்கீட்டிற்கான அவசியத்தை புறம் தள்ளி பேசி நகர்த்திச் செல்கிறார்கள். இது போன்ற மேம்போக்கான எண்ண வெளிப்பாடுகளை கொண்ட விசயம் பேச எதற்கு அறிவியல் துணை தேவைப்படுகிறது? பரம்பரை குணம் இரத்தத்தில் பாய்ந்தோடுகிறது என்பதாகவும் அதனை மீள் பிரதியெடுக்க படத்தில் கதாநாயகனுக்கு ஏற்றிய பச்சை நிற சர்பத்தை தண்டுவடத்தில் ஏற்றி ராஜ ராஜ சோழனையும், போதி தர்மாக்களையும் இன்றைய பரமக்குடி பிரஜைகளாக உருவாக்கவா? நிகழ்கால பிரச்சினைகளை பேசி அதன் பொருட்டான விழிப்புணர்வை பரப்புவதே உண்மையாக ஒரு சமூகமாக பிழைத்து தம்மை தக்க வைத்துக் கொள்வதற்கான வழி முறையாக இருக்க முடியும்.

மாறாக அறிவியலின் துணைகொண்டு நம்பிக்கையின் அடிப்படையில் பேசப்படும் விசயங்களுக்கு உயிர் ஊட்டி மென்மேலும் மூட நம்பிக்கைகள் பல்கிப் பெருக வழியமைப்பது இல்லாத ஊருக்கு வழிகாட்டுவதாகத்தான் அமையும். Thanks for no thanks!


பி.கு: இங்கே ஒரு விஞ்ஞானி இப்படியாக பாஞ்சிருக்கார் (அழுத்தி படிங்க )... அறிவியல் கண்டுபிடிப்புகள் தமிழ் சினிமாவில் நகைப்புக்குள்ளாக படுவது நினைத்து கடுப்பை கிளப்புகிறது.

Sunday, October 09, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - V


ஐயா ஞானவெட்டியான், ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்திற்குமே அருந்தொண்டு ஆற்றிவருகிறார். இந்த வயதிலும் அவரின் ஆர்வமும், உழைப்பும் என்னை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடுவதுண்டு. அவருடைய அத்துனை வலைத்தளங்களும் பொக்கிஷங்களாக பாதுகாத்து அந்தந்த வளர்ச்சி நிலைகளுக்கேற்ப பயன் படுத்திக் கொள்ளத்தக்கது எனினும், நான் அடிக்கடி செல்லும் அவரது வலைத்தளம் ஞானவெட்டியானின் ஞான வேள்வி என்ற தளத்திற்குத்தான் இன்றைய நாட்களில்.

அங்கு அன்பர்களின் ஆன்மீகம் சார்ந்த கேள்விகளுக்கு விடை பகன்று வருகிறார்.

18.மனம் என்பது ஆன்மாவா? என்ற கேள்விகளிலிருந்து மனத்தின் வளர்ச்சி நிலைகள் என்று அடுக்கடுக்கான பதிவுகளை அங்கே காணலாம். இருந்தாலும், தமிழ் மணத்தில் இவரின் பதிவுகள் வந்து போகாமல் நின்று போனது நமக்கெல்லாம் ஒரு இழப்பே!

அறிவியலும் ஆன்மீகமும் என்ற வலைத்தளத்தில் செந்தில் குமரன் என்பவர் முன்பொரு காலத்தில் விடாது பதிவுகளை கொடுத்துக் கொண்டிருந்தார். அங்கே மிகவும் எளிய நடையில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணத்தில் இயற்பியல் சார்ந்த ப்ரபஞ்ச கோட்பாடுகளையும், அதன்பால் ஏற்படும் ஆச்சர்யத்தை மறக்காமல் ஆன்மீகக் கேள்விகளுனூடையே

வைத்து கேள்விகளையும் தொடுக்கும் விதம் ஒரே கல்லிள் இரண்டு மாங்காய்கள் அடிப்பதனைப் போன்றே வாசகர்களுக்கு அமைந்திருக்கிறது. அதற்கு உதாரணமாக அறிவியலும் ஆன்மீகமும் - 3 அனுபவித்துப் பாருங்கள். 

பரஞ்சோதி மற்றும் விழியன் நடத்தி வந்த சிறுவர் பூங்காவும் குழந்தைகளுக்கான

சிறு சிறு குட்டிக் கதைகளும், பாப்பாப் பாடல்களையும் வழங்கி வந்தது. அதுவும் ஒரு நேரத்திற்குப் பிறகு நின்று போனது. அதனை எழுதியவர்கள் இன்னமும் இங்குதான் உலாவிக் கொண்டிருக்க வேண்டுமென்று எனக்குப் பல்லி சொன்னாலும் ஏன் அப்படி எழுதுவதை நிறுத்திக் கொண்டார்கள் என்று வினாவ வேண்டும் போல் உள்ளது.

திடீரென்று தஞ்சாவூரான் என்றழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்கே உரித்தான குசும்புடன் ஒருவர் வந்தாரய்யா. பதிவுக்குப் பதிவு நகைச்சுவையும், நக்கலும் மோலோங்கியிருந்தாலும் மறக்காமல் அந்த நகைச்சுவைக்குப் பின்னால் ஒளித்து வைத்திருக்கும் சிந்தனை நம்மை சிரிக்க வைத்து பிறகு யோசிக்க வைக்கத் தவறுவதில்லை. அமெரிக்காவுக்கு இந்தியா வச்ச ஆப்பு! சென்று படித்து வந்தாலே தெரியும் நான் எது போன்றவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேனென்று.

அண்மையில் தமிழ் மணத்துப் பக்கம் வந்து கலக்கிக் கொண்டிருக்கும் சுரேகா! இவரிடம் கதம்பமாக எல்லாத் திறமைகளும் ஒளிந்திருக்கிறது என்பதற்கினங்க வித விதமான பதிவுகளை காணப் பெறலாம் அவர் தளத்தில். சாமி காட்டிய தங்கசாமி! போன்ற வித்தியாசமான மனிதர்களை தின வாழ்க்கையோட்டமென்ற குப்பையிலிருந்து தனித்தெடுத்து நமக்கு அறிமுகப் படுத்துவதாக இருக்கட்டும், பஞ்சு மெத்தையில் படுத்தும் தூக்கம் பெற தவிக்கும் கூட்டத்திற்கிடையே ஈரோட்டுப் பெண்கள் என்ற பதிவில் இப்படியும் சக மனித ஜீவன்கள் இருக்கிறதென்று நம் கண் முன்னே நிறுத்துவதாகட்டும், நல்ல நல்ல வேளைகள் செய்து வருகிறார்.

Thursday, October 06, 2011

கால நிவாரணி...


எல்லாமே கடந்துதான்
வந்துவிடுகிறோம்
நேற்றைய கிளிமஞ்சாரோ
இன்றைய இளைப்பாறலுக்கான
சிறுகுன்றாகிப் போனது
எவரெஸ்ட் ஏறிய பொழுதில்...

மறக்கவே முடியாத
ஏதோவொரு பெருஞ்சுமை
இன்றைய இலவம்பஞ்சுப் பொதி.
மனப் பல்லிடிக்கில் அகப்பட்டு
என்றேனும்
சிரிப்பூனூடே எட்டித் துப்பப்படுகிறது...

சுவாசமென அள்ளி
நெஞ்சுருக அணைத்ததொன்று
மறுநாள்
காத்திராமல் ஏதோ ஒன்றால்
ஹீமோகுளோபினுள் கரைக்கப்பெற்று
பிராணவாயுவாய் மாறி விடுகிறது

சர்வரோக நிவாரணியாய்
காலம் மட்டும்
ஆற்றுதல் படுத்திக் கொண்டே
மூட்டு வலியை
ஆழப் பதிக்கிறது!




In Buzz...

Tuesday, October 04, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - IV


எனது கடந்த பதிவில் சுய முன்னேற்றக் கட்டுரைகளும் இடம் பெறுகிறதென்று பிதற்றல்கள் என்ற வலைத்தளத்தைப் பற்றி சுட்டிக் காட்டியிருந்தேன். அதே லைனில் என்.கணேசன் என்பவரும் விட்டு விலாசிக் கொண்டுள்ளார். அதே பெயரின் தளத்தின் கீழ், அங்கே அவரே எழுதிய சிறுகதைகள், கவிதைகள், சுய முன்னேற்றம், ஆன்மிகம் மற்றும் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கிறது. அண்மையில் நான் அங்கு வாசித்த படகு புகட்டிய பாடம் என்ற சுய முன்னேற்றக் கதையில் கோபத்தை கையாள்வது எப்படி என்பதனை மிக அழகாக சில உதாரணங்களைக் கொண்டு விளக்கியிருந்தது பிடித்திருந்தது.

அனாதை என்ற பெயரில் ஒருவர் இங்கு உண்மையிலேயே அனாதையாக நிறைய கிடைக்கற்கரிய உலகப் திரைபடங்களைப் பற்றி எழுதிவருகிறார். இவர் தான் பார்த்த அதாவது இன்னா படம்தான் இன்னா மொழிதான் என்றில்லை போல அத்தனை இன, மொழி எல்லைகளையும் தாண்டி படம் பார்த்து அவைகளுக்கு விமர்சனம் எழுதும் திறமை அசத்தலாக உள்ளது. இது போன்ற மக்களும் இங்கு இது போன்ற ரசனையுடன் இருப்பது நமக்குப் பெருமைதானே! இவர் Cronicas / காலக்குறிப்புகள் என்ற தலைப்பின் கீழ் எப்படித் தனக்கு இது போன்ற ஆர்வம் கிளம்பியதென்ற நினைவுகூர்தலுடன் நிறைய விசயங்களை அங்கே பகிர்ந்துர்க்கிறார். சினிமா பிரியர்களுக்கு அத் தளம் ஒரு தங்கச் சுரங்கமாக அமையும்.

K.P. குப்புசாமி என்ற ஓய்வுற்ற காவலதிகாரி ஒருவர் மூலிகை வளம் பற்றி எழுதி வருகிறார். அங்கே அது போன்ற தாவரங்களின் புகைப்படங்கள் அவைகளின் குடும்ப வகை, தாவரப் பெயர் மற்றும் அதன் பயன்பாடுகள் என்று அவரின் பக்கங்கள் மூலிகைச் செடிகள் மற்றும் அவைகள் எவ்வாறு பல்வேறு வியாதிகளுகளை குணப்படுத்தலாம் என்பதனை பட்டியிலிட்டுக் நிறைத்திருக்கிறார். சும்மா பார்ப்பதற்கே கண்களுக்கு

பச்சை நிற செடிகளின் படங்களையும் டெம்ப்ளேட்டையும் கொண்டு குளிர்சியூட்டுகிறார்.

சிங்கநல்லூர் சுகா, இவரை நான் விடுவதே இல்லை. தான் பார்த்து வளர்ந்த விசயங்கள் தன்னைச் சுற்றிலும் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அந் நேரத்தில் ஒரு அனிச்சையாகத்தான் நம் மனத்தில் ஏறி சிம்மாசனமுற்றிருக்கும். ஆனால், ஊரைப் பிரிந்திருந்து விட்டு அவைகளை மீண்டும் அனுபவிக்கும் பொழுது அவைகள் ஒரு புது பரிமாணம் காட்டிப் போகத் தவறுவதில்லை என்பதற்கு இவரின் பல பதிவுகள் சாட்சி. அப்படி ஒரு பதிவாக இவரின் கோடை காலத்து மீண்டும் மழை அமைந்திருக்கும்.

பிறகு "பேருந்து ஜன்னலோர இருக்கை பிரயாணம், பயனங்களும் பாடங்களும்" போன்ற பதிவுகளிலும் ஏனைய பிற இடுகைகளிலிலும் நிறைய அன்றாடம் நாம் இயந்திரத் தனமாக கண்ணுரும் காட்சிகளுக்கு, சுகா ஒரு புது பரிமாணத்தைக் கொடுத்து நமக்கும் அவர் உள்வாங்கி இருக்கும் வீட்சத்திற்கு நம்மையும் இட்டுச் செல்ல முயற்சித்திருப்பார். அத் தளத்திலேயே இவரது பென்சில் ஓவியங்களும் காணக் கிடைக்கும்.

Thursday, September 29, 2011

கழுகமைவு...


கசிந்தொழுகி முழங்கிக்கொட்டிய
மழை மரணிப்பின்
ஒரு பின் மாலைப்பொழுதில்
வெளுப்பேறிப்போன மென் தோல்
உதறிய உள் மனதுடன்
அவன் சாலையோரத்தில் அமர்ந்திருந்தான்...

ங்கோ வட்டமிட்டபடியே
கொழுத்த வார்த்தை ரணமேறிய
மனித மன ஊன் உண்ணும்
பூமி பார்ந்திருந்த பட்சியொன்று
அவனருகில் சிறகு சுருட்டி
வந்தமர்ந்து, நிமித்தமாய்
மனவாய் கிளறியது...

ஒப்புவிக்க ஒப்புவிக்க
ரணமருந்தியபடியே
கற்றறிந்த வித்தையின் 
இலக்கணப்படி
அவசரமாய்
சொற்களுக்குள் 
செருகிக் கொண்டிருந்தது...

சூலுற்றிருந்த கருவை இறக்கும் 
நாழிகையை எண்ணியபடி...

பட்சி அறிந்திருக்கவில்லை
தான் உண்டு தரிசித்தது
நொடிப்பொழுதைய
உதிரக் குழம்பையென...

எலும்பு மஜ்ஜை இன்னமும் மிச்சமிருக்கிறது...


P.S: Discussion in Buzz ...Kazhugamaivu...

Monday, September 26, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - III


சிங். செயகுமார் என்று ஒரு வலைப்பதிவர் முன்பொரு காலத்தில் நிறைய விசயங்களை கவிதை வடிவாகவும், சிறுகதைகளாகவும் கொடுத்துக் கொண்டுருந்தார். எழுதியவைகளில் அனேகமானவை காதல் சார்ந்தும் அவரின் சமூக பார்வையாகவும் இருந்தது. சமீப காலமாக அவரைக் காண முடிவதில்லை, அச் சமயத்தில் படித்த காதலர்தினம்! என்ற தலைப்பில் ஒரு கவிதை என் மனதில் தைத்துப் போனதை உங்களின் பார்வைக்காக வைத்திருக்கிறேன். ஏனைய பதிவுகளும் அருமையாக இருக்கும், சுவைத்துப் பாருங்கள்.

கூட்டைக் கலைத்த பின் ஒரு பறவைக்கு நேரும் கொடூரத்தை கொடுப்பது போலவே ஒரு கைம்பெண்ணிற்கும் நம் சமூகத்தில் நிகழும் அவலத்தை தோலுரித்திருக்கார் பஹீமாஜஹான் என்பவர் அழிவின் பின்னர்...... என்ற தலைப்பின் கீழ். இவரின் "ஊற்றுக்களை வரவழைப்பவள், தடுமாறும் தனிப்பாதம்" என்ற பதிவுகளும் ஏனைய பதிவுகளும் மிக நேர்த்தியாக இருக்கிறது.


திறந்து வைத்திருக்கிறாள்


என்று ஒரு குழந்தையின் கள்ளமில்லாத்தனத்தை இந்த மூன்று வரிகளுக்குள் வைத்து, மனிதன் வளர்ந்த பிறகு எவ்வளவு சூது, வாதுடையவானுகிறான் என்று எண்ண வைத்து விடுகிறார் ராஜா சந்திரசேகர். மேலும் தொடர்ந்து "மனிதக் காடு" என்று பெயரிட்ட தலைப்பின் கீழ் நாம் மெது மெதுவாக எப்படி நம்முள்ளே இருக்கும் அந்த கபடமற்றக் குழந்தையை எப்படியெல்லாம் தொலைத்து, தேடித் தேடி எங்கே காண்கிறோமென்று அழகாக அந்தக் கவிதையில் பொதித்து வைத்திருக்கிறார். இவரின் இரண்டு மூன்று வரிக் கவிதைகளில் ஏதாவதொன்றை படிக்க நேர்ந்தாலே அடுத்தடுத்து படிக்கத் தோன்றும் மாஜிக் தீம் இருக்கிறது மற்ற மற்ற பதிவுகளிலும்.


ஆனந்தமாய் உண்டு களிக்க நாமே பயிர் செய்கிறோம்


செய்கிறோம்


இந்த ஒரு கட்டுரை வடிவ கவிதையே போதும் இந்த வளர்ந்து வரும் நெஞ்சத்துக்குள் பீறிட்டு வெளிக் கிளம்பும் தொலை நோக்குப் பார்வையும் நவன் என்ற பதிவரின் வாழ்வு சார்ந்த பட்டறிவையும் பறைசாற்ற. மென் மேலும் இவர் தொடர்ந்து தனது எண்ணங்களை இங்கே வைப்பார் என்று நம்புவோம்.

பிதற்றல்கள் என்ற வலைத்தளத்தில் சிரிப்புக்கும், சிந்திப்பதற்கும் ஏற்ப பல பதிவுகளுண்டு. அங்கே அவ்வப்பொழுது பித்தானாந்தாவாக ஒரு புது அவதாரம் எடுத்து விடுவார் அந்தத் தளத்தின் நிர்வாகிகளில் ஒருவர் போலும். அவ்வாறு எடுத்த அவதார கோலத்தில்தான் 262 : பித்தானந்தாவின் போதனை என்ற தலைப்பின் கீழ் ஒரு கவுஜாவை வடிதிருக்கக் கூடும். அதில் விளையாட்டுப் போக்கில் நிறைய தத்துவங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். இரட்டை தன்மையில் வாழும் அனைவரையும் ஒரு முறை உட்முகமாக திரும்ப வைக்கும் ஓர் பதிவு. ஏனைய பதிவுகளில் வெடிச் சிரிப்பிற்கும் (குறிப்பாக பின்னூட்டங்களில்), சுய முன்னேற்றக் கட்டுகரைகளுக்கும் பஞ்சமே இல்லாமல் இருக்கிறது.

Related Posts with Thumbnails