Friday, April 15, 2011

பரிணாம விதி நம் கையில்: Bio-engineering

தெக்கியில் வெளியான துடைத்தழிக்கப்படும் நெல், தான்ய விதைகளுக்கு நம்ம அனலிஸ்ட் ஒரு காணொளி இணைப்பை கொடுத்து ‘பயங்கரம்’ அப்படின்னு சொல்லியிருந்தார். சரின்னு நானும் உடனே பார்க்க ஆரம்பித்தேன். சில விசயங்கள் நம்ப முடியாத அளவிற்கு முன்னேறி எதனையும் எப்படியும் செய்து கொள்ளலாம் அது நம் கண்களுக்கும், வயிற்றிற்கும் மேலோட்டமான கொண்டாட்டத்தை தருவித்து தருகிறது என்றால் என்ற கொள்கையுடன் முன்னேறி அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சிப்பதாக பட்டது எனக்கு.

என்னுடைய பழைய பதிவொன்றில் இப்படியாக இந்த உயிரிய-தொழில் நுட்பத்தின் கட்டுபாடற்ற மனித கற்பனை எங்கே கொண்டு போயி நிறுத்தலாம் நம்மை என்று விளையாட்டாக கூறி வைத்தேன். ஆனால், அதனை இந்த காணொளி ஆமாம் ரொம்ப பக்கத்திலே வந்திட்டோம்னு சொல்ல வருது.

...Thekkikattan said...

கேளுங்கள் ஆச்சர்யப் பட்டு போவீர்கள். இந்த மரபணு மாற்றுமுறை (selecting the desired genes) மனிதனில் ஆரம்பித்தால் கணினி மென்பொருள் வாங்குவது போல இரண்டு IQ சேர்த்து போட்டு நம்ம பொறக்கப் போற குழந்தைக்கு வாங்க பக்கத்து வீட்டு ராமன் கிட்ட 10000ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு போகலாம் :-)))

அறிவியல் பூர்வமாக பரிணாம வளர்ச்சி என்பது இயற்கையாகவே இருக்கும் சுற்றுப்புற தேவைகளுக்கென இயற்கையே தனது பயணத்தை நிர்ணயித்துக் கொள்ளும் ஒரு பாங்கு, அதில் அழகும், ஆச்சர்யமும் கலந்த கலவையே மிஞ்சி, அன்று வாழும் உயிர்களுக்கு வழங்குகின்ற ஒரு அற்புதச் செயல்.

இது போன்ற பரிணாம மாற்றங்கள் எதனால் நடந்தேறியது என்பதனை நாம் அரிதி கணக்கீட்டு சொல்ல முடிவதில்லை. அது இயற்கை சார்ந்த புரியா புதிர்களில் ஒன்று.

ஆனால் இன்றோ நாம் இந்த பரிணாம விந்தையை நம் கையில் எடுத்துக் கொண்டு இயற்கை கடவுளாக உயிர்களில் மாற்றங்களை கொண்டு சிருஷ்டிக்க ஆரம்பித்திருக்கிறோம். அம் மாற்றங்களின் பக்க விளைவுகளை முற்றிலுமே அறியாமலே, பிரஞையற்று, தன்னிச்சையாக...


Thursday, April 07, 2011

துடைத்தழிக்கப்படும் நெல், தான்ய விதைகள்:GM Pollution!

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நம்மாழ்வாரின் ஒரு காணொளி பார்த்ததிலிருந்து அவரிடத்தின் மீது எனக்கு அளவற்ற ஈர்ப்பை உருவாக்கியிருக்கிறது. அதற்கு முன்னால் நவதான்ய என்றமைப்பின் நிர்வாகியும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராக முழங்கி வரும் டாக்டர். வந்தனா சிவா மீதும் இருந்த அதே கவனம் இப்பொழுது இவர் மீதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. மேலாக அவரை இந்த முறை ஊருக்கு வரும் பொழுது எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்ற ஆவலை வளர்த்து விட்டிருக்கிறது.

இந்த நிலையில் பஸ்ஸில் ஒரு இழை ஓடிக் கொண்டிருந்தது. அங்கு பார்வையாளனாக மட்டுமே அந்த இழையை பின் தொடர்ந்து வந்தேன். அதில் நமது தஞ்சாவூரான் என்ற விவசாயி இப்படியாக தனது ஆதங்கத்தை இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்துவதின் பொருட்டு பேசிக் கொண்டே செல்லும் பொழுது இப்படியாக ஒரு விசயத்தை முன் வைத்தார்...

...தட்டான், ஈசல், மண்புழு, பிள்ளைப்பூச்சி, பாப்பாத்தி (செவப்பா கரும்புள்ளியோட இருக்கும்), குசுவினிபூச்சி, சில வகை எறும்புகள், தண்ணிபாம்பு, சாரை பாம்பு, பச்சை கொம்பேறிமூக்கன், வண்ணத்துப்பூச்சி, சிட்டுக்குருவி, அணில், ஓணான், அரணை, உடும்பு, தேரை, சாம்பிரானி, பால்நண்டு, நட்டுவாக்காளி, கூழைப்பாம்பு, பச்சைக்கிளி, மரங்கொத்தி, கொக்கு, நாரை, மடையான், மணிப்புறா, காடை, கவுதாரி, குயில், நரி, காட்டுப்பூனை - இது எல்லாமே வயக்காடு, கொல்லைக்காட்டுலேருந்து மறைஞ்சுபோச்சுண்ணே ;( ...

அதனை படித்த பின்பும் என்னால் ஒரு பார்வையாளனாக இருக்க முடியவில்லை. எனது புரிதலாக இயற்கையமைப்பில் எப்படி இந்த மரபணு மாற்ற தொழில் நுட்பம் பல பில்லியன் ஆண்டுகளாக இயற்கை எடுத்து செயல் படுத்தி சிறுகச் சிறுக கட்டியெழுப்பி வரும் உயிரின பன்முகத் தன்மையை, சூழலமைவை (ecosystem) ஒரு சில ஆண்டுகளிலியே துடைத்தெரிய தக்கது என்பதாக எனது கருத்தினை வைத்தேன். அங்கு கூறிக் கொண்டிருக்கும் பொழுதே தனிப்பதிவாக கொண்டு வருவதின் அவசியமும் உணர்ந்தேன்.

ஏற்கெனவே 2006, 07லிலுமாக இரண்டு பதிவுகளில் பல விசயங்கள் பின்னூட்டங்களின் மூலமாக அலசப் பட்டிருக்கிறது. இந்த பதிவில் பேசப்படாத விசயங்கள் அங்கே காணப்படலாம்.

அ) பரிணாமச் சீர்கேடு ஓர் அறிமுகம்

ஆ) இந்தியாவிற்கு வால்மார்ட் அவசியமா?


இப்பொழுது கொஞ்சம் விரிவாக எப்படி இந்த சர்வதேச பண முதலைகள் தன்னிறைவுடன் ஓடிக் கொண்டிருக்கும் தனியொரு விவசாயின் உயிர்வாதார பிழைப்பிலும், நேரடியாக கை வைத்து தங்களது பணப் பேராசையை தீர்த்துக் கொள்ள முயல்கிறார்கள் என்பதை லட்சக்கணக்கில் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் இந்த கால கட்டத்தில் பேசுவது உகந்ததாக இருக்கும்.

இயற்கையின் அமைவில் உணவு சுழற்சி என்பது தன்னியல்போடு ஓடிச் சேர்வது. அது காலங் காலமாக இயற்கை தேர்ந்தெடுப்பின் பொருட்டாக கிடைக்கும் சுற்றுப்புறச் சூழல் காரணிகளை கொண்டு மரபணு பண்புகளை கூட்டி குறைத்துக் கொண்டு அந்த சார்ந்து வாழும் ஊரின் மண்ணியல்போடு தொடர்பு கொண்டதாக பரிணமித்து வளர்கிறது. பெரிய படத்தில் சற்றே விரித்து பார்த்தால் அந்த மண்ணில் வாழும் ஆயிரக் கணக்கான நுண்ணுயிர்களையும் அந்த சுழற்சியில் பங்கேற்க வைத்து அவைகளையும் தழைத்து, செழிக்க வைத்து ஏனைய சார்பு உயிரினங்களையும் உய்வித்து வளர்ந்து வரும் சூழலியல் 'வானம்' அந்த நிலமும் அதனில் விளையும் பயிரும், உணவுப் பொருட்களும்.

எப்படி ஒரு குழந்தை உருவாவதில் ஒரு பெண்ணின் சார்பில் கரு முட்டையும், ஆணின் பங்காக ஒரு விந்தணுவும் மட்டுமே இயற்கையமைவில் போதுமானதாக இருக்கிறதோ, அது போலவே தாவர உணவு பொருட்களை சுய சுழற்சி செய்து கொள்ள நம்மிடம் இயற்கை எதிர்பார்க்கும் ஒரே விசயம் அதன் இயல்பில் கை வைக்காமல் விட்டு விடுவதுதான். ஏனெனில் ஒரு விதையின் வழியாக நமக்குத் தேவையான எதிர்கால உணவு உற்பத்திக்கான கருவையும் உள்ளடக்கியே விளைச்சலில் கொடுத்து நிற்கிறது. மாறாக மரபணு மாற்றமுற்ற விதையில் பூச்சிக் கொல்லியை முன்னமே வைத்து தைத்து கொடுத்து சமச்சீரை உடைப்பது மாதிரி இல்லாமல்.

அந்த இயற்கையின் அமைப்பை உடைத்து, சார்பு நிலையையும், அடிமை தனத்தையும் வளர்க்கும் மரபணு மாற்றமுற்ற மலடி விதைகளை விளைவித்து உண்டது போக மீண்டும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆய்வகத்தில் உருவாக்கித் தரும் விதைகளுக்கு கையேந்தி நிற்பதில் எத்தனை சுதந்திரம் ஒரு விவசாயிக்கு இருந்து விட முடியும். இதுவும் இன்றைய கால கட்டத்தில் பெட்ரோலிய விலை நிர்ணயம் பண்ணக் கூடிய ஒரு சார்பு பொருளாதார நிலைக்கு நாளை நம்மை இந்த உணவு உற்பத்தி திறன் சார்ந்து எடுத்துச் சென்று விடாதா?

பணத்தை மட்டுமே இலக்காக கொண்டு செயற்படுத்தப் படும் மலடி ரக விதைகளை ஊக்குவிக்கும் மரபணு தொழில் நுட்பம், ஒரு நாட்டின் ஒட்டு மொத்த விவசாயிகளின் உரிமையை மட்டும் பரித்து எடுத்துக் கொள்ள முயலவில்லை, ஒரு தேசத்தின் உணவு தன்னிறைவையும், அதன் உணவுசார் பாரம்பர்யத்தையும், வாழையடி வாழை விவசாய அறிவையும் பிடுங்கிக் கொள்ள முயற்சிக்கிறது என்பதனை ஏன் நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை?

இது வரையிலும் நாம் இந்த தொழில் நுட்பத்தின் வழியாக இழக்கும் அரசியல்/சமூக/பொருளாதார சுதந்திரத்தை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம்! இதே செய்கை எப்படி பெரியளவில் சுற்றுப் புறச் சூழலையே சிதைத்து நாம் பார்த்து வளர்ந்த நமது கிராம பூமியையே கோரமாக்கிக் காட்டும் என்பதற்கு மேலே தஞ்சாவூரானின் பின்னூட்டமே சாட்சி. ஓர் ஊரில் வாழும் தாவர விலங்குகளுக்கும் அங்கு விளையும் உணவிற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எங்காவது ஒரு மாற்றம் அதனில் ஏற்படுமாயின் மொத்த வாழ்வுச் சங்கிலியுமே அறுபட்டு போகிறது.

ஐரோப்பாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விளை நிலத்தின் பக்கமாக வந்து போகும் வண்ணத்து பூச்சிகளின் எண்ணிக்கை 40% சதவீதம் குறைந்து போனதாகவும், ஸ்கைலார்க் எனும் பறவையின் வரத்து போக்கும் சுத்தமாகவே நின்று போனதாகவும் பக்கத்து பக்கத்து வயல்காடுகளில் மரபணு மாற்றமுறச் செய்த விளைபயிர்களையும், இயற்கை முறையில் சாகுபடியாகும் வயல்களுக்கிடையில் செய்த ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. இதனில் கீழே சிந்திய இயற்கை பயிர்களினான விதைகள் மீண்டும் முளைக்கும் சாத்தியமிருப்பதால் அதனையொட்டிய ஜீவராசிகளின் வரத்து போக்கிற்கான காரணமாக தெரிய வந்திருக்கிறது.

இந்த மரபணு மாற்று பயிர்களுக்கென தூவப்படும் உரங்கள் பயிர்களுக்கான போஷாக்கை தருவதற்கெனவே என்ற வகையில் பாவித்தாலும் மண்ணை நாட்போக மலட்டுத் தன்மைக்கு இட்டுச் செல்கிறது. மண்ணும் சுவாசிக்கிறது என்பதனை இந்த இடத்தில் மறந்து போகிறோம்! பூச்சிக் கொல்லிகள் பயிர்களை தாக்கும் தேவையற்ற பூச்சிகளை கட்டுபாட்டில் வைத்துக் கொள்ளவே என்ற போதிலும் இயற்கையிலேயே அங்கு வாழும் மற்ற ஜீவராசிகள் அதனதன் வேலைகளை செய்வதிலிருந்து முற்றிலுமாக விளக்கி விடுவதால் நன்மை தரும் பூச்சி, பட்டுகள் கூட காலப்போக்கில் சுத்தமாக துடைத்தெரியப் படுகிறது. அல்லது அவைகளிலும் ஏதோ ஒரு வகையில் மரபணு மாற்றத்தை முடுக்கி விட்டு சூப்பர், டூப்பர் வகையில் புது விதமான நச்சு வகையாக மாறிப் போய் விடும் அபாயமாகவும் ஆகிவிடுகிறது. இந்த ரசயானங்களும், பூச்சி கொல்லிகளும் விளைந்த உணவுகளின் ஊடாக நமக்கு வந்தடைகிறது என்று சொல்லிதான் விளங்கிக் கொள்ள வேண்டுமென்று இல்லை.

புதிதாக நம் உடம்பிற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பல வேதிய பொருட்களின் இருப்பு (chemical traces) இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது இரு வேறு கால அவகாசங்களில் ஒரே மனித உடலில் இருக்கும் வேதிய tracesகளின் மூலமாக உறுதி படுத்தப்பட்டுள்ளது. இது எப்படி நிகழ்ந்திருக்கக் கூடும்? இது போன்ற புற வேதிய பொருட்கள் உடலில் எகிரும் பொழுது புதிது புதிதாக வியாதிகளின் வருகையும் அதிகரிப்பதினில் என்ன ஆச்சர்யமிருக்கக் கூடும். செயற்கையாக கரவை மாடுகளில் வளர்ச்சியைச் தூண்டும் மாற்று மரபணு வளர்ச்சிக் ஹார்மோன்களை உட்செலுத்தி அதிக பாலை பெறும் முயற்சியில் நமக்கு கிடைக்கும் உபரி - (IGF-1- இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி) அந்த பாலின் மூலமாக கிடைக்கப் போய் அதுவே புற்று நோயைத் தூண்டுவதாக அமைந்து விடுகிறது.

நாமே மரபணு மாற்றங்களை உருவி, சொருவி தேவையானதை சிருஷ்டித்து கொள்வதின் மூலம் உடனடி லாபம் ஈட்டினாலும், இயற்கையில் நிகழ்வுறும் பரிணாம சங்கிலித் தொடர் மாற்றங்கள் நிகழ்வுருவதை சிதைத்தவர்களாகிறோம்.

மேலும் இயற்கையில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் இந்த இயற்கை சுற்று சூழலியியல் பின்னணியில் பின்னி பிணைந்து கிடப்பது. ஒரு சில பூச்சிகள் ஒரு சில தாவரங்களை மட்டுமே உண்டு அவைகளின் இனப்பெருக்கத்தையும், பரவலையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதாக இருக்கலாம். ஒரு சில பூச்சிகள், ஒரு சில தாவரங்களில் மட்டுமே அழிவைக் கொடுக்கும் பூச்சிகளின் லார்வாக்களை உண்டு அந்த பூச்சிகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் இயற்கையமைவு இது.

எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கையின் பன்முகத் தன்மை போற்றி பாதுக்காக்கபட வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம், ஏனெனில் அந்தந்த சுற்றுப் புறச் சூழ்நிலையில் தமக்கேயான மருத்துவ குணங்களுடன் உள்ள indigenous, ethnollogically முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் இயற்கை நமக்கு கொடுத்த கொடை, அதனை பேணி பாதுகாப்பதும் நமது எதிர் கால தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லும் சொத்தே!

Selective breeding is wiping out the natural biodiversity! which is not good in the long run - full stop!

தஞ்சாவூரானின் ஊர் வயல் காடுகளில் அவர் பார்க்கும் சாதாரண ஜீவராசிகள் இவ்வளவு சீக்கிரமாக அவரின் பார்வையிலிருந்து காணாமல் போனதிற்கு ஒரு விளக்கமாக இதனையும் கொள்ளலாம். இந்த மறைந்து போனதிற்கு பின்னணியில் கூட நான் மேலே சொன்ன பரிணாமச் சங்கிலி (உணவுச் சங்கிலியும்) சிதைவுற்றதும் ஒரு காரணமாக இருக்கலாம். உதாரணமாக, நாம் தடைசெய்யப் பெற்ற ஒரு பூச்சிக் கொல்லியை நம் வயலில் பயன்படுத்துகிறோமென்று வைத்துக் கொள்வோம் அது அங்கு வாழும் தவளைகள், நண்டுகள் போன்றவற்றை நேரடியாக பாதிக்கிறது அடுத்த முறை அவைகளின் இனப்பெருக்க முறையில் பெரிய மாற்றமெனில் அவைகளையே உணவாக கொள்ளும் மற்ற பறவைகள், விலங்கினங்களின் நிலை என்னவாக இருக்கும்...? இதுவே மாற்று மரபணு தாவரங்களுக்கும் பொருந்தும், அந்த தாவரங்கள் அந்த லோகல் இயற்கை உணவுச் சங்கிலியை அறுப்பதாக இருக்கலாம் அப்படி அது சிதைவுரும் பொழுது நம்பி உள்ள ஏனைய பிராணிகளும், பூச்சிகளும் உடனடியாக பாதிக்கப்பட்டு மாண்டழியலாம்... :(.

இந்த பரிணாம மாசுபாட்டையும், இயற்கையின் சுழற்சியில் தலையிட்டு ஊடறுப்பையும் நிறுத்திக் கொள்வது எல்லா முட்டையையும் ஒரே கூடையில் போட்டு ஒரு நாள் போட்டு உடைத்து கொள்வதனை போலல்லாமல், தப்பி பிழைத்துக் கொள்ள சிந்தித்து செயல் படுவோம்! இதுவே ஒரு தேசத்தின் உணவு தன்னிரைவிற்கும், அமைதிக்கும், தனி மனித சுதந்திரத்திற்கும் குறியீடான ‘முளை விதை’ பொருள் சொல்லி நிற்கட்டும்.

முற்றிலுமாக நமது பன்முக உணவுத் தாவர விதைகளை இழந்ததிற்கு பின்பாக குய்யோ, முறையோ என்று கதறிக் கொண்டு எங்கோ செயற்கையாக விதைகளை உற்பத்தித் தரும் ஆய்வுக் கூடங்களை நம்பியே கையேந்தி நிற்பதில் பொருளொன்றுமிருக்காது.

அப்படியே இந்த காணொளியையும் பார்த்து விசயத்தின் வீரியத்தையும், தீவிரத்தையும் உணர்ந்து கொள்ளுவோம்...




Sunday, April 03, 2011

திருப்பதி ஏழுமலையானே ராஜபக்சேவிற்கு ஆசீர்வாதம்?!

இந்த புகைப்படத்தை பார்த்ததிலிருந்து இனம் புரியாத எரிச்சலும், மானுட நம்பிக்கை இழக்க வைக்கும் எண்ணங்களுமாக என்னுள் எழுந்து போகிறது. நம்முடைய அரசு யாரை எரிச்சல் படுத்தி பார்க்க மேலும், மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி பார்க்கிறது? இந்த புகைப்படத்தினை பார்த்த மாத்திரத்தில் இருந்து என்னுள் எழுந்த கேள்விகளில் சில:

அ) ஆயிரக் கணக்கில் மனித உயிர்களை உயிரோடும், குத்துயிரும், கொலை உயிருமாக இருக்கும் போதே புல்டோசர் கொண்டு நிரவியும், குழியுனுள் போட்டு மூடியும் கொன்ற ஒருவருக்கு எப்படி இன்னமும் மனித மாண்புகள் இருக்கக் கூடுமென்று எந்த கடவுளும் ஆசிர்வதிக்கும்? அதற்கு சாமீ பூஜாரிகளும் இந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் போலவே அங்கீகரித்து ஆசீர்வதிப்பார்கள்? அவருக்கு மென்மேலும் எதனை நிகழ்த்த ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது?

ஆ) ஒருவரை ஏதோ ஒரு நோக்கத்திற்காகவோ அல்லது அறியாமலோ கொன்று விட்டால் கூட ஒரு காலத்தில் மனசாட்சி கேக்காமல் தன்னையே ஒப்படைத்து கொள்ளும் மனித மனத்திற்கிடையே, எப்படி ஒருவர் பல்லாரயிக்கணக்கான உயிர்களை கதறக் கதற அழித்தொழித்துவிட்டு இப்படி மண்டைக்குள் எந்த குடைச்சலுமே இல்லாமல் புன்னகைத்து அலைந்து திரிய முடியும்? சரி, சில மனிதர்கள் நம்புவது போலவே ஆவி, பேய், பிசாசு சமாச்சாரங்கள் உண்மையாக இருந்தால் இவர்களை ஏன் போய் பிராண்டப்படாது? அப்போ அதுவும் உண்மையில்லையா??

இது போன்ற பல கேள்விகள். அதனையொட்டியும் சில பின்னூட்டங்களையும், உண்மைத் தமிழன் பதிவினையும் படித்ததிற்கு பின்னாலும் வந்த சிந்தனையையும் சற்றே விரிவாக கீழே வைத்திருக்கிறேன். பொறுமை உள்ளவர்களும், தன்னைத் தானே தரம் பிரித்து பார்த்துக் கொள்ள விரும்புவர்களும், please go on read...

மற்ற விலங்குகளிடமிருந்து நம்மை பிரித்துணர நமக்கு கிடைத்த சிறப்பு பண்புகளிலேயே ஆறாம் அறிவாக கிடைத்த சிந்திக்கும் பண்பே சிறந்தது என்று இங்கே பலர் அறிவோம். இந்த சிந்திக்கும் திறனாலேயே நாம் இன்றைய பரிணாம ஏணியின் உச்சத்தில் ஒரு மானுட இனமாக ஏனைய ஜீவராசிகளை அடக்கி ஒடுக்கி உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கிடைத்த குச்சி ஐசை சுவைத்துக் கொண்டுமிருக்கிறோம்.

இந்த சிந்திக்கும் திறனுக்கு மிகவும் துணையாக இருப்பது நமது ஞாபக சக்தி. இந்த ஞாபக சக்தி தனிமனித வளர்ச்சியினைக் கொண்டு பல குண நலன்களாக தேவையான பொழுது இப்பொழுது நடக்கும் ஒரு நிகழ்வினூடாக பழைய விசயத்தினை வைத்து தைத்து எடுக்கும் முடிவிற்கு முக்கிய காரணியாக செயல்பட்டு நம் முன்னால் நிற்கும் அந்த மனிதன் எது போன்ற எண்ணச் செயல்பாடுகளை கொண்டவன் என்பதனை அறியத் தருவதாக இருக்கிறது.

அந்த தனிமனிதன் தனிப்பட்ட முறையில் குண நலன்களாக பொது நலனை கருத்தில் கொண்டு அடுத்தவர்களுக்கு நிகழும் தன் முயற்சியற்ற அநீதிகளை தனக்கானதாக கருதி எந்த தருணத்திலும் சமரசம் அடைந்து கொள்ளாமல் தக்க தருணத்தில் நீதி பெற்றுத் தரும் ஒரு ’மைட்டோகாண்ட்ரியா’வாக ஒரு சமூகத்தில் இருக்கலாம். மாறாக, சுயநலத்துடனும், வசதியாகவும் தனக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் உண்மை விசயங்களை புறந்தள்ளி இயல்பாகவே அது போன்ற விசயங்களிலிருந்து தன்னை விடுவித்து கடந்து செல்லும் ஒரு நிகழ்வாக பார்வையுரும் சுயநல நபராகவே தன்னை, தன் சிந்திக்கும் திறனை பழக்கப்படுத்திக் கொள்பவராக அமைந்து விடுவர்.

இது போன்று ஞாபக சக்தியில் நிறுத்தும் பழைய, கடந்து போன சம்பவங்களில் கசப்பான, உடலுக்கும்/மனதிற்கும் தீய்மை தரும் விடயங்களை மறந்து கடப்பது நமக்கு மிக்க நன்மை பயக்கும். அதே சமயத்தில் உலக ப்ரபஞ்ச ரீதியில் ஒட்டு மொத்தமாக மனித நிலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிறந்து போனதினையொட்டி இன்னொரு இனத்தின் ஊடாக பிறந்தவர் தவறான எண்ணங்களை தனது இனத்திற்கு ஊட்டி வலிமையற்ற ஓரினத்தை தனது சுய லாபங்களுக்காக துடைத் தெரியும் துர்ச் சம்பவத்தை கண்ணுருகிறோம் என்றால் எப்படி அந்த மனிதனை இன்னமும் நம் கூடவே வைத்துக் கொண்டு ஒன்றுமே நிகழாத மனநிலையில் நம்மால் மறந்து வாழ்ந்து விட முடியும்?

மனிதர்களாக அப்படி கடந்து விடுவதும், அது போன்ற மனிதர்களை நம் கூடாக வாழ விடுவதும் நாளை நடந்து முடித்திருப்பதனைக் காட்டிலும் பெரியளவில் எடுத்து நிகழ்த்த முயல மாட்டான் என்று எந்த நிச்சயத்தில் நாம் நிம்மதியாக உண்டு, உறங்கி எழ முடியும்? இதற்காக நீ செய்வதனை நிறுத்திக் கொண்டாயா என்ற அதி புத்திசாலித்தனமான கேள்வியை கேட்டு மடக்க நேரத்தை இழக்க வேண்டாம்...

சில வருடங்களுக்கு முன்பு மும்பை தாஜ் மற்றும் புகைவண்டி நிலையத்திலும் கண் மூடித்தனமாக கட்டவிழ்த்து விடப்பட்ட துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தானின் நேரடித் தலையீடு இருப்பதாக அதனைத் தொடர்ந்த வருடங்களில் பாகிஸ்தானும் அந்த துப்பாக்கிச் சூட்டிற்கான விசாரணையில் ஒத்துழைக்க செய்யவில்லையென ‘கிரிக்கெட் பேச்சு வார்த்தையில்’ கூட சேர்த்துக் கொள்ளாமல் உலக மேடையில் நம் தேசம் அவர்களை அவமானப் படுத்தி பார்த்தது.

இங்கு சில பேர் சொல்வது போல அதாவது விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் அன்றைய சூழ்நிலையில் பாகிஸ்தானை புறக்கணித்து உலகத்தின் பார்வையை அந்த நாட்டை நோக்கி பார்க்க வைக்கும் நோக்கில் செய்து காமித்தோம். என்னை பொருத்த மட்டில் அதுவும் ஒரு நல்ல அரசியல் நகர்வு என்பேன். ஆனால், இன்று எந்தளவிற்கு அந்த நாடு இந்தியாவின் பாதுகாப்பு கருதி பாதி வழி வந்து நம் நாட்டின் கோரிக்கைகளை ஏற்றிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இப்பொழுது வட்டியும் முதலுமாக இந்த வாரம் நடந்து முடிந்த ‘கிரிக்கெட் பேச்சு வார்த்தையில்’ முதல் மரியாதை கொடுத்து பாகியின் பழைய கோபத்தை தனிந்து போகச் செய்திருக்கிறது.

இதன் பின்னணியிலேயேதான் உலக அரங்கில் அந்த குட்டியூண்டு இலங்கை தீவில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்தேறிய இனப்படுகொலை தொடர்பாக உலக அரங்கில் மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரிப்பு அந்த நாட்டின் அதிபருக்கு இருக்கிறது. ஆனால், அதனின்று தப்பித்து தப்பித்து எந்த அடையாளங்களை அப்புறப்படுத்தவோ என்னவோ இன்றைய அளவிலும் எந்த ஒரு வெளி நாட்டு மனித உரிமை கழகத்தினையோ, பத்திரிக்கைகளையோ உள்ளே விடாமல் அடைத்து வைத்துக் கொண்டு எதனையோ அவசர அவசரமாக செய்து கொண்டிருக்கிறார்.


அண்டைய தேசமான மிகப் பெரிய ஜனநாயகத்தை உள்ளடக்கிய ஒரு நாடு அதன் கை சுத்தமாக இருந்தால், காந்தி பிறந்த மண் அஹிம்சையை போதிக்கும், சிறப்பாக எடுத்தியம்பும் ஒரு நாடு இலங்கையில் இது போன்றதொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது எனும் பட்சத்தில் அந்த அதிபரை உலக சபையின் முன் நிறுத்தி நீதியை நிலை நாட்டித் தருவது என்பது அதன் பங்கும், கடமையுமில்லையா?

ஒரு முரடனை தனிமைப் படுத்தி, அவன் உண்மையான முகம் வெளிக் கொண்டு வர அதற்கான வழிகளுக்கான சந்தர்ப்பம் அமையும் பொழுதெல்லாம் சுறுக்கை இறுக்குவதின் மூலமாக மட்டுமே அல்லவா அநீதியை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும். அதனை விட்டுவிட்டு ஒரு இனப்படுகொலையாளனை எப்படி தோழனாக கொள்ள முடியும்? அப்போ பாகிஸ்க்கு ஒரு நீதி, இந்த குட்டித் தீவு அதிபருக்கு ஒரு நீதியா?!

இது வரையிலும் சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த உலக மானுட ஒழுக்க நெறி, மாண்புகளை எல்லாம் இழந்து விட்டோம் என்ற வாக்கில் ஒரு மனிதன் இனப் படுகொலையை நம் கற்பனைக்கும் எட்டாத வகையில் எல்லாம் நிகழ்த்தி விட்டு எப்படி இப்படி விசிலடித்துக் கொண்டு கேளிக்கை விளையாட்டுகளில் நல்லவனாக வலம் வர முடியும்?

விளையாட்டை விளையாட்டாக பார் என்றால் அத்தனை உயிர்களின் விலை என்ன மயிரா? யார் நீதியை பெற்றுத் தருவது? விளையாட்டு வீரர்களுக்கும் சமூக கடமை இருக்கிறதா இல்லையா? அவர்கள் என்ன ரோபாட்டா? இது போன்ற விளையாட்டுக்களிலிருந்து தனிமை படுத்தி காட்டுவதிலிருந்து உலக சபையில் என்ன நடந்திருக்கிறது என்று நாம் யோசிக்க வைக்க வில்லையெனில் பிறர் யார் யோசிக்க வைப்பார்கள்?


Photo Credit: Net

Related Posts with Thumbnails