Sunday, September 28, 2008

உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs!

ம்ம்... சரியாக 2001ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், நானும் மாநிலம் மாறி என்னுடைய ஓட்டுநர் உரிமத்தை மாற்றி புதிய மாநிலத்தில் இணைத்துக் கொள்ளும் அவசியத்தில் இருந்தேன். அப்படியாக நானும் அந்த அலுவலகத்தில் என்னுடைய பழைய ஓட்டுநர் உரிம அட்டையை ஒப்படைத்து விட்டு, புதிய மாநில அட்டையை வாங்கும் பொழுதும், புகைப்படம் எடுத்துக் கொண்டு, இதர கேள்விகளுக்கு பதிலுரைத்துக் கொண்டு வரும் பட்சத்தில், ஓரிடத்தில் நிறுத்தி பொறுமையாக "டு யூ வாண்ட் ட்டு பி ஆன் ஆர்கன் டொனர்" என்று கேட்டார்.

அப்படியே ஒரு நிமிடம் ஆடிப் போய் யாரோ பொடீர் என்று செவுட்டில் அடித்ததினைப் போன்று உறைந்து போனேன். அவரிடம் ஒரு நிமிடம் என்று கேட்டுக் கொண்டு, என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு" என்னடா இது இதுபோன்ற ஒரு கேள்வியை என் வாழ் நாளில் நான் கேட்டுக் கொண்டதே இல்லையே இப்படியான சாவுடன் தொடர்படுத்தக் கூடிய கேள்வியை இவ்வளவு சாதாரணமாக கேட்டு சிந்திக்க வைத்திவிட்டாரே என்று ஆட வைத்தது.

இருந்தாலும் மறுபக்கம் வாய் கிழிய எல்லாம் பேசும் நமக்கு சாவு என்றவுடன் சும்ம அதிர்ந்து போகுதே ஏன், இறந்த பிறகு தம்மிடம் பிரயோசனமாக பிறருக்கு உதவும் வாக்கில் உள்ள சில உறுப்புகளை எடுத்துக் கொள்ளட்டுமா என்று கேட்டவுடன் ஏன் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வறை உதறுதே ஏன்? என்று மனம் குழம்பிப் போனது உண்மை. சுதாகரித்துக் கொண்டு மரண பயத்தை தூரத்தே வைத்துவிட்டு உள்ளுணர்வை எழுப்பி கேட்டவுடன் இயல்பென்ற ஒரு விசயம் கடிவாளத்தை பற்றிக் கொண்டது, நானும் அதன்படியே "எஸ், ப்ளீஸ் ஆட் மீ" என்று கூறிவிட்டேன். அன்றிலிருந்து நானும் ஒரு உடலுறுப்பு பங்களிப்பாளன்.


இதனை எழுத வேண்டுமென நீண்ட நாட்களாகவே ஆசைப் பட்டதுண்டு, ஆனால் பிறரை தர்மசங்கடத்தில் ஆட்படுத்தக் கூடும் என்பதினால் தள்ளிப் போட்டதுண்டு. இன்று தினகரனில் ""உள்ளத்தில் நல்ல உள்ளம்..."" என்ற தலைப்பிட்ட உடலுறுப்பு தானம் எந்தளவில் இந்தியாவில் செயலில் இருக்கிறது என்பதனைப் பற்றி படிக்கும் பொழுது மிகவும் ஆச்சர்யமாக இருந்ததது அங்கே குறிப்பிடப்பட்டிருந்த சில புள்ளியல் சார்ந்த குறியீடுகள்.

உதாரணத்திற்கு அந்தக் கட்டுரையிலிருந்து... "உலக அளவில் ஸ்பெயின்தான் உறுப்பு தானம், உடல் தானத்தில் முதலிடம் வகிக்கிறது. அங்கு வசிக்கும் 4.60 கோடி பேரில் 14500 பேர் முன்வந்து உறுப்பு மற்றும் உடல் தானம் செய்கிறார்கள். ஆனால், 100 கோடி பேர் வசிக்கும் இந்தியாவில் ஆண்டுக்கு 30 முதல் 40 பேர் மட்டுமே உடல் தானம் செய்கிறார்கள்.".... என்று குறிப்பிட்டதை படித்தவுடன், நான் ஏன் அப்படி அது போன்ற ஒரு கேள்வி ப்ரக்ஞையுணர்வே அற்று வாழ்ந்திருக்கிறேன் 2001ம் ஆண்டு வரை என்பது பட்டென புரிந்தது.

ஏன், இத்தனை மக்கள் தொகையுடன் உள்ள ஒரு நாடு, இத்தனை மீடியாக்கள் தங்களுடைய பிழைப்பை ஜரூராக நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் கூட வெறும் 30 லிரிந்து 40 பேர் மட்டுமே முன் வந்து தானம் செய்யும் நிலை? மதத்தில், இறப்பிற்குப் பிறகு இது போன்ற உடலுறுப்புகளுடன் மேலே வந்தால்தான் மீண்டும் பிறப்பெடுக்கும் பொழுது ஏதுவாக இருக்க முடியும் என்ற முறையில் எழுதப் பட்டுள்ளதா? எனக்குத் தெரிந்தவரையில் இந்து மதத்தில் அப்படிய் அடிக் கோடிட்டு காட்டப்பட்டு குறிப்பிடப் பட்டுள்ளதாக தெரியவில்லை. பிற மதங்களை பற்றி, நோ ஐடியா!

இத்தனை நல்லவர்களை கொண்ட(?!) நம் நாடு ஏன் ஸ்பெயினைக் காட்டிலும் இத்தனை கருமியாக இறப்பிற்குப் பிறகும் கூட மனிதர்களை வைத்திருக்கச் செய்கிறது? எப்படியோ, எல்லா மதங்களும் ஆத்மா என்ற ஒன்று இருப்பதாகவும், அது மட்டுமே நமது மரணிப்பிற்கு பிறகு மேலெழும்பிச் சென்று பிறகு எங்கடைய வேண்டுமோ அங்கடைந்து மறு-சுழற்சி (ரீ-சைக்கிலிங்) செய்யப் படுவதாக அறிகிறேன்.

அப்படி இருக்கும் பொழுது உடலுறுப்பிற்கும், ஆத்மாவிற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? எனவே, இந்த உடலுறுப்புச் சார்ந்த விசயத்தில் நிறைய மரண பயமும், கொஞ்சமே மதம் சார்ந்த விசயமும் குறுக்கிடுவதாக நான் கருதுகிறேன். மரணத்தைப் பற்றிய பயத்தை மரணிக்க வைத்துவிட்டால் நீங்களும் குபேரனாக வாழ்ந்து முடித்ததாக இச் சமூகம் உணரும் இந்த "தானாக முன் வந்து உடலுறுப்பு தானம் செய்யும் பொறுட்டு" இல்லையா?

ஆனால், இன்னும் கொஞ்ச காலங்களில் இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சிகளின் உச்சமாக ஆய்வுக் கூடங்களிலே இது போன்ற டி.என்.ஏ பொறுத்தம் கொண்ட உடலுறுப்புகளை உற்பத்திக்கவும் முனைந்துவிட்டால், மனித பயத்தினையும், மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் போற்றி பாதுகாத்து கேள்வி நிலைக்கு நம்மை இட்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தமிருக்காது - அதுவும் ஒன்று.

நம்மூரில் நடிகர் கமல்ஹாசன் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானம் செய்திருப்பதாக அறியும் தருவாயில், அவரின் மீது பன்மடங்கு அறிவுசார் மரியாதை கூடுகிறது.

இதனை வாசிப்பவர்களின் பார்வை எதனைப் பொறுட்டு ஒத்துப் போகிறது, விலகி நிற்கிறது என்பதனை அறிய ஆவலாக இருக்கிறது. பகிர்ந்து கொள்ளுங்கள், நல்லவர்களே!

Thursday, September 25, 2008

ஹெய்டி - ஒர் மனித இயற்கைத் துயரம்: Haiti's Man Made Disaster!!

ஹெய்டி (Haiti) என்றொரு கரீப்பியன் தீவு நாட்டைப் பற்றி எனக்கு படிக்க, கேக்க நேரும் பொழுதெல்லாம் மனித குலம் தன்னுடைய இயற்கைசார்ந்த ப்ரக்ஞையுணர்வை மேலும் ஊட்டிக் கொள்ளவும் விழிப்புணர்வு பெறவும் ஒரு இன்றியமையா இடமாக வாழும் நரகமாக எப்படி அந்த தீவு நாடு தன்னை வழி நடத்தி இன்று அத் தீவில் வாழவே அருகதையற்றதாக மாற்றிக் கொண்டது என்று ஏனைய நாடுகள் பார்த்து தெரிந்து கொள்ள ஒரு ஆய்வுக் கூடமாக திகழ்கிறதுங்கிற மாதிரி எண்ணத் தோன்றும்.

இத் தீவின் ஆதீயைத் தோண்டிப் பார்த்தால் இது ஒரு சொர்க்கப் பூமியாகத்தான் மலையும், மலையுஞ்சார்ந்த இடமாக மழைக் காடுகளுடன் கட்சியளித்ததாக தெரியவருகிறது. அதாவது 16வது நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையிலும். அதற்கு பிறகுதான் கப்பல் கட்ட தெரிந்து கொண்ட துரைமார்கள் ஊரோடியாக இருந்துப் போய் துரதிருஷ்ட வசமாக இந்தத் தீவினிலும் கால் பதித்திருக்கிறார்கள். முதற் காலனி ஃப்ரெஞ்ச்சும், ஸ்பானிஷும் இங்கே கோலோச்சியிருக்கிறார்கள்.

துரைமார்கள் என்றாலே இயற்கை படைக்கப்பட்டதே மனிதன் நுகர்ந்து அழிப்பதற்குத்தான் என்ற மன நிலை தீர்க்கமாக அவர்களின் புத்தகத்தின் மூலமாகவே அடி மனதில் தூவப்பட்டுவிட்டது. இந் நிலையில் 16ம் நூற்றாண்டு வாக்கில் கிட்டத்தட்ட 6000 வேறுபட்ட மர இனங்களும்(இதில் அவ்வூருக்கேயான இனங்கள் 35% இருந்திருக்கிறது - i.e., Endemic species), 220 பறவை இனங்களும்(அவைகளில் 21 பறவை இனம் அங்கு மட்டுமே காணப்படுபவை), கிட்டத்தட்ட நம்மூர் மேற்கு மலைத் தொடரில் காணப்படும் பறவை இனங்களின் கூட்டுத் தொகைக்கு நிகர், அப்படியெனில் அத் தீவின் உயிரின பன்முகத் தன்மை (Bio-diversity) எந்தளவிற்கு செழித்து இருந்திருக்க வேண்டுமென பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆனால், ஃப்ரெஞ்ச் மக்கள் அத் தீவை உறித்து எடுத்தது போக, 1915லிருந்து 1934 வரையிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பின் பொழுது அலும்னியத்திற்கான தாதுப் பொருள் கிடைக்கிறதென நாட்டையே புரட்டிப் போட்டு தோண்டியிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், ரப்பர் மரங்களை அங்குள்ள இயற்கை மழைக்காடுகளை அழித்து ஒரு தனியார் நிறுவனம் தனது இஷ்டத்திற்கு அவ் மரக் கன்றுகளை நட்டு விளையாண்டிருக்கிறது. எனது நண்பர் ஒருவர் அவரின் அனுபவத்தை இது தொடர்பாக பகிர்ந்து கொள்ளும் பொழுது எப்படி சிறு நாடுகளை தன் சொந்த லாபத்திற்காக வளர்ந்த நாடுகள் கண்மூடித்தனமாக பயன்படுத்திக் கொண்டு விட்டெறிந்து விட்டு வந்துவிடுகிறது பின்னாளில் என்பது விளங்கியது.

இன்று அந்த நாட்டிலிருந்து சாகுபடியாகிக் கொண்டிருந்த கரும்பையும், வாழை, மா போன்றவைகளின் இறக்குமதியைக் கூட சில அரசியல் காரணங்களால் அமெரிக்கா நிறுத்தப் போக விளைவு மக்கள் உள்ளதைக் கொண்டு வாழும் நிலை உள் நாட்டில். விளைவு எது அவர்களின் அழியா சொத்தாக, உயிர் காக்கும் தோழனாக இருக்க வேண்டியிருந்த வனங்களும், பலன் தரும் பழ மரங்களும் கூட தனது அகோர பசிக்கு ஒன்றன் பின் ஒன்றாக வெட்டி வீழ்த்தப் போக எஞ்சி நின்றது வெறும் மலை அதுவும் மணல் குன்றுகளாகத்தான் போல.

அதனையொட்டி ஓவ்வொரு முறையும் ட்ராபிகல் சூறாவளிகள் அந் நாட்டை கடக்கும் பொழுதும் மலைகள் மரங்களற்ற நிலையில் கரைந்து வெறும் சேற்று ஆறாக வெள்ளம் ஊர்க்காடுகளில் பெருக்கெடுத்து நடக்கவோ அல்லது வீடுகளில் கூட வாழவோ முடியாத நிலை. அண்மைய குஸ்டவ் மற்றும் ஐக் என்று பெயரிடப் பட்ட சூறாவளிகள் அடுத்தடுத்து தாக்கும் பொழுது அதிகளவில் உயிரிழப்பை சந்தித்தது ஹெய்டி மட்டுமே.

இந் நிலையில் அந் நாட்டில் சரியான அரசியலமைப்பும் சீர் கெட்டுப் போன நிலையில், வறுமையும், வன்முறையும் ஒரு சேர கூட்டுச் சேர்ந்து அந் நாடே ஒரு அழிவின் விளிம்பில்.



(மேலே உள்ள படத்தில் கவனித்துப் பார்த்தீர்களேயானல் சேற்று ஆறிலிருந்து தப்பிக்க மக்கள் அகப்பட்ட கூரைகளில் தஞ்சம் புகுந்திருப்பதனை காணலாம்)

இதனிலிருந்து உலகிற்கு கிடைக்கும் பாடம் என்னவெனில், அரசியல் வாதிகளின் சுரண்டல் புத்தியும், சுயநலமும், தீர்க்க மற்ற பார்வை இயற்கை சார்ந்தும் தனது நாடு சார்ந்தும் இல்லாமல் போனால், அதனால் ஏற்படும் பின் விளைவுகள்தான் இன்று கண்ணுரும் இந்த மனித அவலம். வளரும் அத்துனை நாடுகளும் பிற வளர்ந்த நாடுகளுடன் போட்டுக் கொள்ளும் ஒவ்வொரு கண்மூடித்தனமான ஒப்பந்தங்களுக்குப் பின்னாலும் எது போன்ற இயற்கை சுரண்டல்கள் நடைபெறும் என்பதனை நீண்ட கால யுத்தியாக யோசித்து நகர்வடைவது நலம் பயக்கும் என்று அறிந்து கொள்வதே.

இருந்தாலும் அந்த பாடத்தை பிற நாடுகள் கண் கூடாக அறிந்து கொள்ள ஹெய்டி மக்கள் கொடுத்த விலை அளவிடற்கரியது.


Thursday, September 11, 2008

மலிந்து வரும் அமெரிக்க அரசியல்: Cheap Political Stunts

வரும் நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் அமெரிக்கத் தேர்தலில் எதிர்பார்த்தபடியே பல குட்டிக்கரனங்கள் ஒவ்வொன்றாக அரங்கேற ஆரபித்தாகிவிட்டது என்பதற்கிணங்க குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதிக்கு ஜான் மெக்கெய்ன் அலாஸ்காவிலிருந்து இறக்குமதி செய்திருக்கும் சாரா பேலின் என்ற ச்சியர் லீடிங் நன்றாகவே செய்யும் அழகுப் பதுமையின் தேர்வின் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது, குட்டிக்கரனங்களின் தொடக்கத்தை.



சாரா பேலின் இந்தக் காட்சியில் இணையும் வரை நன்றாகவே சென்று கொண்டிருந்த அரசியல் சார் பிரச்சாரங்கள் இன்று வேறு திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. அதனை கண்ணுரும் பொழுது ஏற்கெனவே கிலி பிடித்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு மேலும் அதுவே அச்சாணி அடித்து நிறந்தரமாக குடியேறி விடுமோ என்ற அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந் நிலை மிகவும் வருத்தத்திற்கூரியது. ஏனெனில், பேசப் படக் கூடிய விசயங்களை ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டத்தினை கைதட்டி "க்கோ ட்டீம் க்கோ" சொல்லிக் கொண்டிருப்பதில், ஒரு விளையாட்டு அணி வெற்றிப் பெற வேண்டுமானால் உடனடி குளூக்கோஸ் ஏற்றுவது போல விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றி விளையாடி வெற்றி பெற வைக்கலாம்.

ஆனால், இங்கு வாழ்வா, சாவா நிலையில் இது போன்ற ஒரு கவர்ச்சி(கன்னித்) திட்டம் தேவையா, நாட்டிற்கும் ஏன் இந்த உலகத்திற்குமே? மற்றுமொரு நான்கு வருட தீரன் புஷ்ஷுன் அடாவடி பொறுப்பற்ற அரசியல் பிரயோகத்தை இந்த உலகம் தாங்குமா? இதோ அதனையும் சுவைத்துப் பார்த்துவிட நேரம் வந்துவிட்டது. நான் முன்பே கருதி, எழுதியும் வைத்து விட்டேன் ஜனநாயக கட்சி சில பல காரணங்களுக்ககாவும், குடியரசுக் கட்சியின் அரசியல் தந்திரத்தாலும், இந்த முறையும் அந்தக் கட்சிக்கே வெற்றி பெரும் அனேகத் தன்மையென ...இந்தப் பதிவின் மூலமாக.

கடந்த சில மாதங்களாக ஓபாமாவின் பின் புலத்தை அறியும் தருவாயில் இழந்த பொருளாதார இழப்புக்களையும், உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கும், சர்வ தேச முறிந்த உறவுகளை புதுபிக்கவும் - அமெரிக்காவின் முக்கியமான வரலாற்று சந்திப்பில் இவரே ரட்சகராக இருக்க முடியுமென்ற எண்ணம் ஆழமாக என் மனதில் பதிய ஆரம்பித்தது.

இந் நிலையில் சாரா பேலினின் மூலமாக மலிந்த வளரும் நாடுகளின் அரசியல் தந்திரங்களை குடியரசுக் கட்சி இங்கும் அமல் படுத்த ஆரம்பித்து விட்டது. அமெரிக்க அரசியல் நாகரீகத்திற்கு இது ஒரு பின்னடைவுதான். முன்பே கூறியதைப் போன்று அரசியல் நாகரீகத்துடன் தேவையான விசயங்களை பேசிச் சென்ற கூட்டங்கள் இப்பொழுது தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

சாரா பலீன் தனது கட்டற்ற குழந்தை ஈன்றெடுப்பு, டவுன் சின்ரோமிருந்தும் தனது மன உறுதியாலும்(?), மத கோட்பாட்டை முன் நிறுத்துவதாலும் ஒரு அர்பணித்த கிருஸ்துவர் என்ற அடையாளத்தின் கீழ் தனது குடும்பத்தை மேடையிலேற்றி ஓட்டு வேட்டை நடத்த ஆரம்பித்துவிட்டார். அதாவது தன் குடும்பம் சார்ந்த பச்சாதாபத்தை முன்னுருத்தி. அதுவும் போர், போர் என்றழையும் மனிதர்களை உள்ளடக்கிய கட்சிக்காக. இதன் மூலமாக அடையப் போகும் பலன் யாவரும் அறிந்ததுதான்.

ஆனால், இதில் என்னவொரு நகைமுரண் என்றால் மற்ற கலாச்சாரங்களை நாகரீமற்று, காட்டுமிரண்டிகளாக இருப்பதாகக் கூறி அவைகளுக்கு விடுதலை அளிக்க எத்தனிக்கும் ஒரு கட்சியே அது போன்ற காலவதியாகிப் போன அடையாளங்களை முன்னுருத்தி ஓட்டு வாங்க எத்தனிப்பதுதான், அது. இவர்கள் இவர்களின் புத்தகத்தின் அடிப்படையில் வாழ்க்கையை அணுகுகிறார்கள் என்றால், அந்தச் சமூகம் அவர்களின் புத்தகத்தின் வழி நடக்கிறார்கள், இதில் யாருடைய வழி சிறந்த வழி என்பதனை யார் கூறுவது?

ஓபாமாவின் ஜனநாயக் கட்சி இந்த வெற்றி வாய்ப்பை தவறவிடும் பட்சத்தில் பல சிரமங்களை இந் நாடும், உலகமும் அனுபவிக்கப் போவது உறுதி என்பது மட்டும் எங்கோ மனதின் ஓரிடத்தில் அபாய மணி அடித்துக் கூறிக் கொண்டே இருக்கிறது. History repeats itself once again, fasten your seat belts my fellow folks.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

அமெரிக்க அரசியல் - தெகாவிற்கான பதில்! by யு. எஸ். தமிழன் [குடியரசுகட்சியின் சாதனைகள் அதனை சரியாக பார்க்கத் தவறிய பொது (என்னைப் போல) ஜனங்களுக்குமான பதிவிது].

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.... by அவியல்செல்வி - [குடியரசுக் கட்சியில் குறிப்பாக சாரா ப்பேலின் ஏன் திடீர் உதயம் என தோலுரித்துக் காட்டும் பதிவிது].

Related Posts with Thumbnails