Thursday, March 20, 2008

ப்ரகாஷ்ராஜ், வெள்ளித் திரை - செய்தியாளர்கள் சந்திப்பு!

நேற்று நான் ட்யூப்தமிழ்.காம் தளத்தில் ப்ரகாஷ்ராஜின் வெள்ளித் திரை படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பை ஒரு 30 நிமிடங்கள் ஓடக் கூடிய படக் காட்சியுடன் காண நேர்ந்தது.

ஏற்கெனவே, நான் ப்ரகாஷ்ராஜின் "சொல்லாததும் உண்மை" சமீபத்தில்தான் படித்ததிலிருந்து அவரைப் பற்றியான எனது பார்வையை இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று எண்ணிக் கொண்டுள்ள நிலையில் இந்த 30 நிமிட படக் காட்சி நிச்சயமாக அவரைப் பற்றி எழுதியே ஆக வேண்டுமென்ற ஒரு நிலையில் என்னை கட்டிப் போட்டு விட்டது. இருந்தாலும், அவரின் "சொல்லாததும் உண்மை"யைப் பற்றி பிரிதொரு சமயத்தில் விளக்கமாக எழுதலாமென்று இருக்கிறேன்.

இப்பொழுது இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் ப்ரகாஷ்ராஜ் எதனை நிறுவ முயல்கிறார் என்பதனைப் பார்ப்போமா. ப்ரகாஷின் தைரியம் நிச்சயமாக பாரட்டப்பட வேண்டிய ஒன்று. அவரின் தைரியத்திற்கு அவர் வைத்திருக்கும் மாற்றுப் பெயர் - நம்பிக்கை.

இன்றைய காலக் கட்டத்தில் தமிழக சினுமா வெறும் போட்ட பணத்தை எடுக்க வேண்டுமென்ற உத்தியில் இயங்கும் ஒரு சிறு ஃபார்மிலாவைக் கொண்டே இயங்குமொரு பணச் சந்தை. மீறிக் கேட்டால் மக்களின் ரசனை அப்படி இருக்கும் பட்சத்தில் என்ன டிமாண்ட் இருக்கிறதோ அதனைத் தான் எங்களால் கொடுக்க முடியுமென்ற பொறுப்பற்ற பேச்சுக்களுக்கு கிடையே இது போன்ற மனிதர்களும் அங்கே இருந்து எதிர் நீச்சல் போட தயாராகி வருவது ஒரு ஆரோக்கியமான சூழல் திரண்டு வருவதை காட்டுகிறது.

நீங்கள் அனைவரும் இந்த விடியோ லிங்கை க்ளிக்கித்துப் பாருங்கள், அந்த சுட்டி வேலை பார்க்கலைன்னா கோலிவுட்டுடெ.காம் போங்க, உங்களின் நிமிடங்கள் ஒரு நல்ல சிந்தனையாளனுடன் உரையாடிவிட்டு வந்த திருப்தியில் அமையும். அவ்வளவு ஆழமான பேச்சு இது வரைக்கும் இந்த டின்சல் உலகில் இப்படி தீர்க்கமாக தன் சார்ந்து இருக்கும் துறையையே கேள்விக்கு உள்ளாக்கி அதன் மூலம் தன்னுடைய தொழில் தர்மம் காத்து, நல்ல விசயங்களை வெளிக் கொணர வேண்டுமென்று ஒரு சாதாரண பார்வையாளன் நிலையிலிருந்து பேசிய கலைஞனை நானறியேன்.

இன்றையச் சூழலில் நடிக, நடிகை என்றாலே கோழிமுட்டை போன்ற பரட்டை தலைக் கேசத்துடனும், அதீத மேற்கத்திய உடையலங்காரத்துடனும், இன்னொரு கிரகத்திலிருந்து இறங்கிய வேகத்தில் திக்தித், திணறி பேசும் மொழி, காலியான மொட்டை மாடியுடனும் இருக்கும் பல கலைஞர்களுக்கிடையில் இது போன்று அலட்டலே இல்லாத புத்திசாலிகளைப் பார்க்கும் பொழுது, நம் தமிழ் சினுமா உலகத்தில் அதனுள் வாழும் பல அரைகுறைகளையும் சிந்திக்க வைக்கும் சூழலை நோக்கி நகர வைக்கச் செய்கிறதோ என்ற நம்பிக்கை துளிர்க்கிறது.

எல்லாம் சரி, நான் இன்னமும் இந்த வெள்ளித் திரை படம் பார்க்கவில்லை, இந்த செய்தியாளர்கள் எதற்காக இப்படி வியர்வை சிந்த நோண்டி, நொங்கெடுத்து ப்ரகாஷ்ராஜிடம் சண்டை பிடிக்கிறார்கள் என்று யாருக்காவது விளங்கினால் எனக்கு அந்த விடியோவை பார்த்துவிட்டு பின்னூட்டங்களில் சொல்லி விட்டு போங்கள்.

வேறு எந்த படத்திற்காவது யாரவது இது போன்ற செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி இந்தப் படத்தின் மூலமாக நீங்கள் சொல்ல வந்த கருத்து என்ன இந்த சமூகத்திற்குன்னு கேள்வி கேப்பாங்களா? இல்லை அது போன்று நடத்தத்தான் தைரியமிருக்கா? ஏதோ, இதன் மூலம் முன்னோடியாக ஒரு நல்ல செயலை ப்ரகாஷ்ராஜ் அறிமுகப் படுத்தி வைச்ச மாதிரி இருக்கு.

ஆனா, அந்த கூட்டத்திற்கு வந்து ஆர்வத்துடன் கேள்விகளைக் கேட்ட செய்தியாளர்களை பார்த்தால் யாரோ "என்வலாப்" (பண முடிப்பு - ப்ரகாஷ்ராஜே கொடுத்திருக்க மறுத்திருக்கும் பட்சத்தில்) கொடுத்து அனுப்பி பொறுப்பாக பார்த்துக்கச் சொன்ன மாதிரி எனக்குத் தோணச் செய்தது ;)). அந்த யாரோக்கள் எல்லாம் ப்ரகாஷ்ராஜ் இப்படி நமது முகத்திரையை அகற்றிக் காமிக்க எத்தனிக்கிறானே என்றும் செய்யக் கூடுமோ...

Related Posts with Thumbnails